புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜன., 2015

மகேஸ்வரன், பரராஜசிங்கம், ஜெயராஜ், ரவிராஜ் படுகொலைகள்! விரைவில் விசாரணைகள்: ராஜித சேனாரட்ன


அரசியல்வாதிகளான மகேஸ்வரன் ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ, நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரவிராஜ் என்னுடைய சிறந்த நண்பராக இருந்தார். மேலும் அவர் திக்கி திக்கி பேசும் சிங்கள மொழியை கேட்க சிங்கள மக்களுக்கு மிகவும் விருப்பம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். அவர் கொலை செய்யப்பட்டதும் சிங்கள மக்கள் மிகவும் கவலையடைந்தனர்.
இதேபோன்று இவருடைய இறுதி கிரியைகளை நானே பொறுப்பேற்று செய்தேன். மேலும் இவரது பிரேதத்தை தகனம் செய்ய விடாது தடுத்தனர். ஆனால் நான் வீதியில் வைத்து பிரேதத்தை எரிப்பேன் என கூறி ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து அப்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த தற்போதைய பொலிஸ்மா அதிபர், சரியான முறையில் பிரேதத்தை தகனம் செய்ய உதவி செய்தார்.
மேலும் ஜெயராஜ் பெர்னாண்டோவை புலிகள் கொலை செய்தார்கள் என கூறப்பட்ட போதும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இவருடைய படுகொலை தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
ஜெயராஜ் பெர்னாண்டோ, நடராஜா ரவிராஜ் போன்றோர் தற்போது இருந்திருந்தால் தமிழ் மக்களுடனான உறவு எவ்வாறு அமைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதியிடம் ஒருமுறை கூறினேன். ஆனால் அதற்கு அவர் இராணுவத்தினருக்கு அரசியல் பற்றி ஒன்று தெரியவில்லை என்றார்.
இதேபோன்று ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட பின்னர் நான் அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக பரபரப்பாக செயற்பட்டேன்.
இதனை முன்னாள் அமைச்சர் தினேஸ் குனவர்த்தனவிடமும் கூறினேன். இதனை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார். அதற்கு அவர் என்னிடம், நீங்கள் ஒன்றும் குழப்பமடைய வேண்டாம் அமைதியாக இருங்கள் என்றார். இந்த செயலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றேன் என்றார். ஆனால் இதுவரையில் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை குழு அமைக்கப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்று முன் நிறுத்துவோம் என்றார்

ad

ad