இலங்கையின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அமெரிக்காவின் உதவியை கோரவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலர் நிஸா பிஸ்வாலிடம் இந்தக்கோரிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்வைக்கவுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு வரும் அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியாக பிஸ்வால் கருதப்படுகிறார்.
இந்தநிலையில் அவருடன் இனப்பிரச்சினை தீர்வு உட்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்தும் பேசப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு ஒன்றை நிஸா பிஸ்வால் மேற்கொள்வார் என்று இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.