புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2015

ஸ்டாலினுக்கு இதுதான் சரியான தருணம்

ன்றைக்கு நாம் ஒரு நல்ல முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். அன்புமணியை முதல்வராக்கிக் காட்டுங்கள்' பா.ம.க. தலைவர் ராமதாஸ்
இப்படி அறிவித்தபோது யார் என்ன நினைத்தார்களோ தெரியாது. ஆனால் நிச்சயம் மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வினரும் என்ன நினைத்திருப்பார்கள் என்பதை எளிதில் யூகித்து விடலாம்.

‘ஸ்டாலின் கட்சித் தலைவராக, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்' என்ற குரல் தி.மு.க.வில் கடந்த சில ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது. கட்சியில் பெரிய அளவிலான மாற்றங்களை தி.மு.க.வினர் எதிர்பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் மு.க.ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக்கப்பட வேண்டும் என்பது. ஆனால் இதற்கு பதில் அளிக்க வேண்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, இன்னும் மவுனமாக இருக்க... காரணம் தெரியாமல் குழம்பி போயுள்ளனர் தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்கள்.

2016ஐ நோக்கி அரசியல் கட்சிகள்


அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் கூட இல்லை. தேர்தலை நோக்கி எல்லா கட்சிகளும் செயல்பட துவங்கிவிட்டன. '2016ல் எங்கள் தலைமையில்தான் ஆட்சி அமையும்... அடுத்த முதல்வர் நான்தான்...' - தமிழகத்தில் இப்படி சொல்லாத கட்சிகளும், தலைவர்களும் மிகவும் சொற்பம் தான். அந்தளவுக்கு மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் தி.மு.க. மட்டுமல்லாது, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பாரதிய ஜனதா, காங்கிரஸ், த.மா.கா. என இதுவரை தேர்தலை சந்திக்காத நாம் தமிழர் கட்சி வரை பல கட்சிகள் அடுத்து எங்கள் தலைமையில்தான் ஆட்சி என அறிவித்தாகிவிட்டது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் என கட்சியால் அதிகாரப்பூர்வமாக (?) அறிவிக்கப்பட்ட  பட்டியலும், தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த், பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ், ம.தி.மு.க.வில் வைகோ, த.மா.கா.வில் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சியின் சீமான் என நீள்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் வரிசையில் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என சொல்லப்படும் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் தானா என்பதை இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தேர்தல் வேலைகளை துவக்காதது ஏன் என்பதுதான் தி.மு.க. தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

முதல்வர் வேட்பாளராக ஏன் ஸ்டாலினை அறிவிக்க கூடாது?


கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின் தான் தி.மு.க.வை வழிநடத்துவார் என்பது அறிவிக்கபடவில்லையே தவிர, மற்றபடி இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 2009ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் என அறிவிக்கப்பட்ட போதே, கட்சியின் அடுத்த தலைவர், அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
துணை முதல்வர் பதவியை அளித்த போது, 'ஸ்டாலினுக்கு வயது 50க்கு மேல் ஆகிறது. அவர் இந்த பதவியை பல ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருக்க வேண்டும்' என சொன்னார் கருணாநிதி. வரும் மார்ச் 1ஆம் தேதி வந்தால் ஸ்டாலினுக்கு 63 வயதாகிறது. ஆனால் இன்று வரை கட்சியை வழி நடத்தும் பொறுப்பு அவருக்கு கிடைத்தபாடில்லை. இப்போது... அப்போது... என இழுத்துக்கொண்டே செல்கிறது.

கட்சியின் மாநாடு, பொதுக்குழு என கட்சியின் தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலின் பெயர் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பல நிகழ்வுகள் ஸ்டாலினுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இந்த கோரிக்கை எழும்போதெல்லாம் தேவையில்லாத சிக்கல் எழுந்து, 'ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்' என கருணாநிதி அறிவிக்க வேண்டிய சூழலை மாற்றி, '2016ல் கலைஞர் தான் அடுத்த முதல்வர்' என ஸ்டாலினே அறிவிக்கும் அளவுக்கு நிலைமை ஏற்படுத்தி விடுவதுதான் வேடிக்கை.
நிச்சயம் கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின்தான் கட்சியை வழி நடத்தப் போகிறார். இதுதான் நடக்கும் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த பின்னரும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயங்குவது ஏன்? என வெளிப்படையாக கேள்வி கேட்க துவங்கிவிட்டனர் தி.மு.க. தொண்டர்கள்.

இணையதளங்களில் துவங்கி, கட்சி கூட்டங்கள், மாநாடு, பொதுக்குழு வரை பல இடங்களில் ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்பதை கட்சி தொண்டர்கள் துவங்கி, நிர்வாகிகள் வரை வெளிப்படையாகவே பேச துவங்கி விட்டனர். அப்படி கடந்த செப்டம்பர் மாதம் நடந்த முப்பெரும் விழாவிலும் ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இதை கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த கல்யாண சுந்தரம், மாநாடுக்கு முன்னரே வெளிப்படுத்தினார்.

"மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வெளிப்படையாகவே கடிதம் மூலம் தெரிவித்தார். ஆனால் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக அவரை நீக்கிய தி.மு.க. தலைமை, தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை.

குடும்ப சிக்கல் காரணமா?

ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படாததற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குடும்ப சிக்கல்தான். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெரிய குடும்பம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என வெளிப்படையாக புலம்புகின்றனர் தி.மு.க. தொண்டர்கள். ஸ்டாலினை தவிர்த்து, மு.க.அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் என குடும்ப பிரமுகர்கள் முக்கிய பதவியை நோக்கி காத்திருப்பதால், இவர்களை எல்லாம் எதிர்த்து விட்டுதான், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட முடியும். இதனாலோ என்னவோ இதை தவிர்த்து வருகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

ஆனால் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், குடும்ப ஆதிக்கம் நிச்சயம் குறையும் என தி.மு.க. தொண்டர்கள் சொல்கிறார்கள். கருணாநிதிக்கும் இது தெரியும். அதனால்தான் ஸ்டாலின் கட்சியை வழி நடத்துவார் என்ற அறிவிக்க தயங்குகிறார் கருணாநிதி. தற்போது 92 வயதை எட்டிவிட்ட கருணாநிதி, தனது 46வது வயதில் தி.மு.க.வின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் ஸ்டாலின் இன்று 63 வயதை எட்டிவிட்டார். ஆனால் இன்னும் அவருக்கு அந்த பொறுப்பு கிடைத்தபாடில்லை.

ஸ்டாலினை வரவேற்கலாம்


"தி.மு.க.வில் தகுதியுள்ள, கட்சி தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராக இருந்தால் தாராளமாக பொறுப்பை வழங்க வேண்டும். அப்போது தான் இயக்கம் உயிரோட்டமாக இருக்கும். கட்சிக்குள் தீவிரமாகப் பணியாற்றி, தொண்டர்களிடம் நற்பெயர் பெற்று, மக்கள் ஆதரவோடு பொறுப்புக்கு வரும்போது அதை வரவேற்று தானே ஆக வேண்டும். எதையும் இயல்பாக நடக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி யாராலும் திணிக்கப்படாமல், இயல்பாக தலைவருக்கான தகுதியை வளர்த்துக்கொண்டவர் தான் ஸ்டாலின். எனவே அவரை வரவேற்பதில் கட்சி தொண்டர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது" என்கின்றார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

கட்சி தலைமையில் மட்டுமில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும் என குரல் எழத்துவங்கியுள்ள தி.மு.க.வில், ஸ்டாலினுக்கு மட்டும் எதிர்ப்பு ஏதும் இல்லை.

"ஸ்டாலின் எடுத்த எடுப்பில் அரசியலுக்கு வந்து பதவியை பிடித்து விடவில்லை. ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்தவர் ஸ்டாலின். 1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 1980களில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரானார். அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை. 1996ல் சென்னை மாநகராட்சி மேயர், பின்னர் எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்த பதவிகளை பிடித்த ஸ்டாலினுக்கு கட்சியையும், அரசையும் வழிநடத்த வேண்டிய பொறுப்பை வழங்க இதுவே சரியான தருணம்," என்கின்றனர் தி.மு.க.வினர்.

கட்சியில் பெருமளவிலான மாற்றங்களை திமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் முக்கியமானது ‘ஸ்டாலின் கட்சித் தலைவராக வேண்டும்' என்பது. இதை நிறைவேற்ற வேண்டியதும், இளைஞர்களுக்கு வழி விட வேண்டியது மூத்தவர்கள் தான்... என்ன செய்யப்போகிறார்கள் கருணாநிதியும், அன்பழகனும்...?

ad

ad