சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதையடுத்து, இவர்கள் அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றதையடுத்து ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அனைத்து பதவிகளும் பறிபோனது.
இருப்பினும், தமிழக அரசு துறை அலுவலகங்கள், விளம்பர பலகைகள், திட்ட வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் படங்கள் நீக்கப்படாமல் இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரி நேற்று (14ஆம் தேதி) அறிவித்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் இணைய தளத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் இருந்து ஜெயலலிதா பெயர் நீக்கப்பட்டுள்ளது. 139வது இடத்தில் தொகுதியின் பெயர் ஸ்ரீரங்கம் என குறிப்பிட்டு, அந்த தொகுதிக்கான எம்.எல்.ஏ. பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளது.