புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மார்., 2015

சுஷ்மா சுவராஜ் – த.தே.கூட்டமைப்பு சந்திப்பு: பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் மீள்குடியேற்றம் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பின்வருமாறு தெரிவித்தார்.
முதலில் மீள்குடியேற்றங்கள் குறித்துப் பேசப்பட்டது. மீள்குடியேற்றம் என்பது முழுமையாக நடைபெற வேண்டும்.சொற்ப காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்தபோதும் இதுவரை ஒரு துண்டு காணி கூட விடுவிக்கப்படவில்லை.
இந்தியாவில் உள்ள எங்களுடைய உறவுகள், புலத்தில் வாழும் எம்மவர்கள் மீளவும் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கு முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.
ஜே.வி.பி யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதைப் போன்று அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் தொடரும் அவலங்களுக்கு உறுதியான முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பது சம்பந்தமாகப் பேசியிருந்தோம்.
மீனவர் பிரச்சினை
மீனவர் பிரச்சனை தொடர்பாக பேசியிருந்தோம். கடந்த காலத்தில் மகிந்த அரசினால் இந்திய மீனவர்கள் பலர் தாக்கப்பட்டிருந்தனர், சுடப்பட்டிருந்தனர், கைதுகள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் தற்போது அவ்வாறான சூழ்நிலைகள் இல்லை. இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடுவதும், எங்களுடைய மீனவர்களுடைய வலைகளை அறுத்துச் செல்வதும் நடைபெறுகின்றது.
இதனால் எமது மீனவர்கள் தொழிலில் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்களுக்கிடையில் மோதல்கள் உருவாகின்ற சூழல் நிலவுகின்றது. அண்மையில் கூட கட்டைக்காடு என்ற இடத்தில் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதருக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். அத்தோடு இந்தியப் பிரதமர் இங்கு வருகின்ற போது அவருடன் மீனவர்கள் சந்திக்க விரும்புவதையும் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
மீனவர் சம்பந்தமான பிரச்சினைகள் தாங்களும் நன்கு அறிந்துள்ளதாக கூறியதோடு, இந்தப்பிரச்சனை தமக்கு கவலை அளிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கடலில் இரு தரப்புக்களும் தொடர்ச்சியாக முட்டி மோதிக்கொள்வது ஆரோக்கியமானதாக அமையாதென்பதை விளக்கியிருந்தோம். அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் இருதரப்புக்குமிடையான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஐக்கியம் பேணப்பட வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஐக்கியம் மிக மிக முக்கியமானது என்றும் சம்பந்தன் மூத்த வயதான அரசியல்வாதி. எனவே கூட்டமைப்பிற்குள் ஜக்கியத்தை நிலைநிறுத்திக் கொள்ளவேண்டிய பெரும் பங்கு சம்பந்தன் அவர்களுக்கு இருக்கிறது.
அந்த ஜக்கியத்தை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அந்த ஜக்கியம் தான் உங்களுக்கான விடுதலை என்பதையும் சுஷ்மா குறிப்பிட்டார்.
இதற்கு சம்பந்தன் பதிலளிக்கையில்,
கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி. அதற்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் என்று பதிலளித்தார். அதன் பிற்பாடு ஜக்கியம் பேணப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
இன்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் ,சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியத்தரப்பிலிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளிவிவகார செயலாளர் ஜெயசங்கர், இலங்கைக்கான இந்தியத் தூதுவர், இந்திய துணைத்தூதுவர், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ad

ad