இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் மோடி நாட்டிவைக்கவுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு நாளையதினம் வரவுள்ள இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடாத்தவுள்ளார்.
நாளை மறுதினம் வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் மன்னாரில் இந்திய அரசினால் புனரமைக்கப்பட்ட தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைப்பதுடன் தலைமன்னாரில் இருந்து மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் பிரதமர் மோடி கீரிமலைப்பகுதியில் இந்திய அரசின் வீட்டுத்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்டு வரும் வீட்டினைத் வைபவ ரீதியாக திறந்து வைப்பதுடன் அவற்றைப்பயனாளிகளிடமும் கையளிக்கவுள்ளார்.
மேலும் இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டிவைக்கவுள்ளார். அத்துடன் யாழ். பொது நூலகத்தில் புதிதாக அமையவுள்ள "இந்தியன் கோர்னர்" ஐயும் திறந்து வைக்கவுள்ளதுடன் நூலகத்தையும் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை இந்தியப்பிரதமர் ரஜீவ்காந்தி இலங்கைக்கு விஜயம் செய்தமைக்குப் பின்னர் இந்தியாவில் இருந்து 25 வருடங்களுக்குப் பின்னர் முதலில் வரும் பிரதமர் என்ற பெருமையினையும் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
அத்துடன் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற போரினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்து நிற்கதியாகி உள்ளனர். அவர்களுடைய உரிமைகளும் மறுக்கப்பட்டு வருகின்றது.
பல்வேறு தேவைகளுடன் வாழும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு இந்தியப்பிரதமரின் வருகை தீர்வினை வழங்குவதாக அமைவதுடன் இலங்கை அரசிடத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்களுக்கு தீர்வு மற்றும் நிலவிடுவிப்பும் மீள்குடியேற்றமும் நடைபெறும் என்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இவருடைய விஜயம் வெறுமனே வருகையாக அமைந்துவிடக்கூடாது என்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க மோடி அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.