அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான எக்சத் சேனாரத்னவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பாணை விடுத்துள்ளது.
திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் பெண்ணை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் மகன் தமது மகளை கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளதாக குறித்த சிறுமியின் பெற்றோர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தெரிவித்திருந்தனர்.
இதேவேளை பெண்ணுக்கு 16 வயதும் 11 மாதங்களும் பூர்த்தியாக இருப்பதாகவும் அவர் விருப்பத்தின் பேரில் சென்றுள்ளதால், அதற்கு எதிராக பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
கிருளப்பனை, பொல்லயாங்கொட, லயனல் எதிரிசிங்க மாவத்தையில் வசித்து வந்த தினிதி ஆலோகா ரூபசிங்க என்ற இளம் பெண் கடந்த 2014 பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி அமைச்சரின் புதல்வரால் கடத்திச் செல்லப்பட்டதாக பெற்றோர் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவுக்கு அமைய அடுத்த மாதம் 2 ஆம் திகதி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.