சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு
வருகைதந்து வைத்தியசலைகளில் உள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார இராஜாங்க அமைச்சர் குழுவினரை வைத்தியசாலையின் அத்தியட்சகர் எம்.உமாசுதன் வரவேற்றார்.
தெல்லிப்பழை வைத்தியசாலையிலுள்ள புற்றுநோயாளர் விடுதி, மனநோயளர் விடுதி உட்பட ஏனைய விடுதிகள், சத்திர சிகிச்சை நிலையம் உட்பட அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்ட அமைச்சர், வைத்தியசாலையில் காணப்படும் குறைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்குத் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்தார்.
மேலும் தெல்லிப்பழை வைத்திசாலையின் பற்றாக்குறைகள், தேவைகள் தொடர்பாகவும் வைத்தியசாலை நிர்வாகத்தினாலும் , நோயாளர் நலன்புரி சங்கத்தினாலும் அமைச்சரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாகவோ அல்லது மாகாண பொது வைத்தியசாலையாகவோ தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தன்னால் முடிந்த அளவுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இதேவேளை சுகாதார இராஜாங்க அமைச்சருடன் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், மத்திய சுகாதார அமைச்சின் அலுவலர்கள், யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தேவநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
சுகாதார அமைச்சர் தெல்லிப்பழை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.