தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் உரையினையும் நிகழ்த்தியிருந்தார் இ இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சம உரிமை, ஜனநாயகம் என்பவற்றைப் பெற்று வாழ வேண்டும். அதற்கு 13ஆவது திருத்தத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை இந்தியா எதிர்பார்க்கிறது.
இவ்விடயங்களில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராகவும் உள்ளது. இலங்கைக்கு 28 வருடங்களின் பின்னர் வருகை தந்தமை எனக்கு பெருமையளிக்கிறது.
இந்திய பிரதமர் ஒருவர் அரசுமுறைப் பயணமாக 1987 ஆம் ஆண்டே இலங்கை வந்தார். இந்தக்கால நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் இங்கு வந்துள்ளேன்.
எனக்கு இலங்கை அளித்த வரவேற்பு பெருமகிழ்ச்சியை தந்துள்ளது. இலங்கையில் பௌத்தம் வந்த நாளில் இருந்தே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொடர்புள்ளது. அத்துடன் மீனவர்களின் பிரச்சினைக்கு இருத்தரப்பிலும் நிரந்தர சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை - இந்தியாவிற்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். அத்துடன் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் தனது உதவியை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.