யாழ் மாவட்டத்தில் இன்று அரச காணிகளில் குடியிருந்த 191 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வாறு வழங்கி வைக்கப்பட்ட காணி உறுதிப் பத்திரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படம் மற்றும் கையெழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாக பத்திரங்களைப் பெற்ற பயனாளிகள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் யாழ் மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளில் உள்ள 191 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதற்கமைய கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 50 பேருக்கும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 40 பேருக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 பேருக்கும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 91 பேருக்குமே இன்று காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளார்.
கையெழுத்திட்ட திகதி 2015 ஜனவரி 6ஆம் திகதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காணி பதிவாளரின் கையெழுத்தில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடப்பட்டுள்ளது.
காணி உறுதியின் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் போது, அவை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனையோருக்கு எதிர்காலங்களில் வழ்ங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.