காணாமல்போனவர்கள் தொடர்பிலான உண்மை நிலையினை வெளிப்படுத்தக்கோரி கடந்த மூன்று தினங்களாக யாழ்.நல்லூர்
ஆலயச் சுற்றாடலில் நடைபெற்றுவந்த கவனயீர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த உண்ணாவிரதப் போராட்டம் சூழற்சி முறையில் இடம்பெற்றதுடன், காணாமல்போனவர்களின் உண்மை நிலையை வெளியிடக்கோரியும், ஐ.நா சர்வதேச விசாரணை அறிக்கையினை வெளியிடக்கோரியும் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் 3வது தினமான இன்றைய தினமும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இன்று மாலை கிறிஸ்தவ மத தலைவர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்த காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு நீர் ஆகாரத்தை வழங்கி போராட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி வல்வெட்டித்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் சதீஸ் தலமையிலான குழுவினர், முள்ளிவாய்க்காலிருந்து தொடங்கிய நடை பயணம் இன்றைய தினம் யாழ்.வந்து நிறைவு செய்துள்ளது.
இந்த நடை பயணத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் முழுமையான ஆதரவினை தெரிவித்திருந்தனர்.