ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கி அரசு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம் செய்யப்பட்டது தவறு என்றும், அவரை நீக்கக்கோரியும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் மனு மீதான விசாரணைக்கு பிறகு 2 நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பை வழங்கியதால் 3 பேர் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அந்த அமர்வில் இடம்பெறும் 3 நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பின்னர் அறிவிப்பார்.
3 நீதிபதிகள் அமர்வு வரும் 21ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கிறது.
ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜரானார். இதேபோல் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையிலும் அரசு வக்கீலாக பவானிசிங்கே ஆஜரானார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி.லோகுர் மற்றும் ஆர்.பானுமதி ஆகியோர் தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது நீதிபதி மதன் பி.லோகுர், 'பவானிசிங் நியமனம் செல்லாது' என்றும் மற்றொரு நீதிபதி பானுமதி, ‘பவானிசிங் நியமனம் செல்லும்' என தீர்ப்பை வழங்கினர். இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், பேரமர்வு விசாரிக்கவும் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து பவானி சிங் நியமனத்துக்கு எதிரான க. அன்பழகனின் மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுவை விசாரிக்கும் அமர்வில் இடம்பெறும் நீதிபதிகள் பெயரை பின்னர் தலைமை நிதிபதி தத்து அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.