மரங்களை அழித்து முற்றம் முழுவதும் சீமெந்திட்ட நிலையில் அழகிய யாழ்ப்பாணம் பங்குனி வெய்யிலால் கொளுத்துகிறது.
இந்நிலையில் இன்று நடந்த திருமண நிகழ்வொன்றில் மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் விநியோகித்தமை புதிய சிந்தனையை தூண்டியுள்ளது.
நாச்சிமார் கோவிலில் நடந்த இத்திருமணத்தில் கொய்யாதேசி, மாதுளை, நெல்லி என பலவகை பயந்தரு மரக்கன்றுகள் அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டன. திருமண நிகழ்விற்கு வந்தோர் மட்டுமன்றி வீதியால் சென்றோரும் இக்கன்றுகளை ஆர்வத்துடன் எடுத்துச்சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
மரக்கன்றுகள் ஒவ்வொன்றிலும் ‘தயவு செய்து என்னையும் பலரையும் பயிரிட்டு பயன் பெறுங்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மணமக்கள் வைத்தியர் மற்றும் பொறியியலாளர் என்பதுடன், இவர்கள் உயர்தரப்பரீட்சையில் யாழ்.மாவட்டத்தில் முதல் நிலையும் அகில இலைங்கை ரீதியிலும் முன்னணி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.