அமெரிக்காவின் தேவைக்காக நாட்டில் ஐ.தே.கட்சி ஆட்சியை உருவாக்கும் சதித்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கின்றார். இதனை தோல்வியடையச் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் மே தினத்தில் ஒன்றிணைவோம் என கூட்டு தொழிற்சங்க சம்மேளனம் அறைகூவல் விடுத் துள்ளது.
அத்துடன் இலங்கைக்கான ஜோன் கெரியின் விஜயத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தது. நாரஹேன்பிட்டியிலுள்ள அபேராம விகாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டு தொழிற்சங்க சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான தினேஷ் குணவர்த்தன, எதிர்க்கட்சியினரை விரட்டி விரட்டி பழிவாங்கும் இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பும் எமது போராட்டம் எதிர்வரும் மே தினத்தில் ஆரம்பமாகும் என்றும் கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்;
எமது ஊர்வலத்திலும் கூட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டுமென பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். மேதினத்தோடு எமது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்து இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம். எமது தலைமையில் புதிய ஆட்சியை உருவாக்குவோம். கூட்டு மே தினத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என 200 க்கும் மேற்பட்டோர் எமது மேதினத்தில் கலந்து கொள்கின்றனர்.
இம் மே தினத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கும் இக்கூட்டத்தில் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். அத்தோடு அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பையும் வழங்கவுள்ளோம்.
முன்னாள் ஜனாதிபதி தனது வரவு செலவு திட்டத்தில் முன்மொழிந்த சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்த அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எதுவுமே இடம்பெறவில்லை.
மாறாக எதிர்க்கட்சியினரை துரத்தி துரத்தி வேட்டையாடி பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே எதிர்வரும் மே தினத்தை மஹிந்த ராஜபக்க்ஷவுடன் ஒன்றிணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றும் தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்தார்.
பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்.பி.
செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெ ளியிட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண குறிப்பிடுகையில்
இலங்கையில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளின் தேவைக்காக ஐ.தே. கட்சியின் அரசாங்கத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகிறார். எனவே ஐ.தே.கட்சி ஆட்சியை கொண்டு வரும் முயற்சியை தோல்வியடைச் செய்ய உழைக்கும் வர்க்கத்தினர் இணைய வேண்டும். ஜ.தே. கட்சி ஆட்சி நாட்டில் உருவானால் முற்போக்கு சக்திகள் மட்டுமல்ல உழைக்கும் வர்க்கத்தினரும் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
பொதுத்தேர்தலை நடத்தி ஐ.தே. கட்சி ஆட்சியை ஏற்படுத்தவே அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை வருகிறார்.
ஜோன் கெரி இலங்கை வருவது ஜனாதிபதிக்கு தெரியாதாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜோன் கெரி வருவது தெரியும்.இதிலிருந்து அமெரிக்காவின் சதி தெளிவாகின்றது.ஜோன் கெரி இலங்கை வருவதை கடுமையாக எதிர்க்கின்றோம் என்றார்.
வாசுதேவ நாணயக்கார எம்.பி. இந்தச் சந்திப்பில் ஜனநாயக இடது சாரி முன்னிணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிடுகையில் மைத்திரி –- ரணில் –சந்திரிக்காவின் கூட்டு சதியை முறியடித்து தேசப்பற்றுள்ள அரசாங்கத்தை கட்டியெழுப்ப மே தினத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மை மண்டியிடச் செய்து மே தினத்தை கொண்டாட முயற்சித்தார். ஆனால் அனைத்தையும் முறியடித்து இடது சாரிகளான நாம் இணைந்துள்ளோம். தேசிய அரசாங்கம் எமக்கு தேவையில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டரசாங்கத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் முன்னாள் ஆளுனர் அலவி மௌலானா தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதி பியசிறி விஜேயநாயக உட்பட பல தொழிற்சங்கங்களினதும் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.