புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2015

7 மாதங்களுக்கு பிறகு கார்டனில் இருந்து வெளியே வருகிறார் ஜெயலலிதா

!சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் மற்றும் விடுதலைக்கு பின்னர் போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதா, ஏழு மாதங்களுக்கு பின்னர் வரும் 22ஆம் தேதி வெளியே வருகிறார். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக அங்குள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 7ஆம் தேதி ஜாமீன் கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, அக்டோபர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அக்டோபர் 17ஆம் தேதி ஜாமீன் வாங்கியது. இதையடுத்து, அடுத்தநாள் 18ஆம் தேதி ஜெயலலிதா, அதாவது 22 நாள் சிறைவாசத்துக்கு பிறகு அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார். போயஸ் கார்டன் இல்லம் திரும்பிய ஜெயலலிதா வெளியேயே தலைகாட்டவில்லை.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து மே மாதம் 11ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். விடுதலைக்கு பின்னர் வெளியே ஜெயலலிதா வந்து தொண்டர்களை பார்ப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. அப்போதும், அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. 

அதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வரும் 22ஆம் தேதி எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.

"22ஆம் தேதி வெள்ளிக் கிழமை சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கும், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கும் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்" என்று அதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ad

ad