அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையின் முன்னாள்
ஜனாதிபதி ராஜபக்சேவின் உதவியாளர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜபக்சேவின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சக கண்காணிப்பு மந்திரியாக இருந்தவர் சஜின் வாஸ் குணவர்தனா. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்தியதில் இவரது பங்கு குறித்து விசாரிக்க கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திய பின்பு, பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியை சேர்ந்த அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.
இலங்கை அரசின் மிஹின் லங்கா என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்த அவர் மீது அந்நிறுவனத்தின் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். முன்னாள் ஜனாதிபதியின் இளைய சகோதரரும், பொருளாதார மேம்பாட்டு மந்திரியுமான பசில் ராஜபக்சே கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பொது தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, முந்தைய ஆட்சியிலான அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார். எனினும், ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இந்த செயலை சிறிசேனா நிர்வாகத்தின் சூனியக்கார வேட்டை என்றும் கூறியுள்ளனர்.