புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் கைதாகிய சந்தேக நபர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிப்பதற்கு இதுவரை தகுந்த சாட்சிகள் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் சிறுமியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒன்பது பேரிற்கும் மரபணு பரிசோதனை நடாத்தப்படவுள்ளது. அவ்வாறு பரிசோதனை அறிக்கைகளில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க நாங்கள் பின்னிற்க மாட்டோம்.
சமாதானமான முறையில் மக்கள் செயற்பட வேண்டும். கொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு மக்கள் எமக்கு உதவ வேண்டும். அத்துடன் சாட்சிகள் இருப்பின் அச்சமின்றி எம்மிடம் தெரியப்படுத்த வேண்டும்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் சந்தேக நபர்களுக்கு பொலிஸார் உதவிகளை மேற்கொள்கின்றனரா என்ற கோணத்திலும் நான் விசாரணைகளை ஆரம்பித்துள்ளேன்.
அதுமட்டுமல்லாது சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார்.
அவர்களது விசாரணைகளும் நடைபெற்று வருகின்றது. குறித்த மாணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை நாம் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிக்கு தண்டனையை பெற்றுக் கொடுப்போம்.
பொலிஸார் மீது மக்கள் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை . உங்களுடைய நியாயமான போராட்டங்களுக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கியே நீதிமன்ற சூழலில் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நாம் இடையூறு ஏற்படுத்தவில்லை.
எனினும் அவர்கள் மீறியதன் காரணத்தினாலேயே சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. எனவே பொதுமக்கள் அமைதியான முறையில் தங்களுடைய நியாயமான போராட்டங்களை நடாத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் அன்றைய வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைதாகியுள்ளனர். மேலும் பலர் கைதாவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.