புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2015

ஈழப் போரில் சதி: கருணாநிதியை உலுக்கும் இலங்கைப் பெண்!


ஈழத்தில் பெண்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட இன அழிப்பின் கடைசிநேர நாடகங்கள் அம்பலமாக தொடங்கியிருக்கின்றன. இறுதிக்கட்டத்தில் புலிகளை சரணடைய வைத்ததில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பங்கு என்ன? இன்னும் யார் யார் இதன் பின்னணியில் இருந்தார்கள்?
என புலித்தலைவர் ஒருவரின் மனைவியே கேள்விக் கணைகளை வீசியிருக்கிறார்.

அந்தப் பெண்மணியின் பெயர் அனந்தி சசிதரன். விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் இவர். ஜூன் 7ம் திகதி கொழும்பில் உள்ள தமிழ் நிருபர்கள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் அனந்தி.

அப்போது இறுதிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த 2009 மே 16ம் திகதி இரவு 8 மணிக்கு கருணாநிதியின் பெண் வாரிசு ஒருவரிடம் எனது கணவர் சசிதரன், சட்டிலைட் போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த பெண் வாரிசு நீங்கள் சரண் அடைந்திடுங்கள், உங்கள் விடுதலைக்கு நாங்கள் உத்தரவாதம் தருகின்றோம், சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது எனக் கூறினார்.

அதை நம்பியே எனது கணவரும் நூற்றுக்கணக்கான புலித் தோழர்களும் மே 18ம் திகதி காலை எட்டரை மணிக்கு பாதிரியார் ஒருவரது முன்னிலையில் சிங்கள அரசிடம் சரணடைந்தார்கள். அதன் பின்னரே பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியானது.

அதன் பின்னர் இன்று வரை எனது கணவரும் அவரோடு சரண் அடைந்த தோழர்களில் பலரும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

இறுதிக்கட்டத்தில் இப்படி சரணடையும்படி கருணாநிதியின் வாரிசு ஏன் சொன்னார்? இதன் பின்னணியில் யார் யார் இருகின்றார்கள்? இதையெல்லாம் இப்போதாவது கருணாநிதி வெளிப்படையாகப் பேசவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் அனந்தி.

ஈழ இறுதிப்போரில் கருணாநிதி துரோகம் செய்ததாக இவ்வளவு நாளும் வைகோவும் சீமானும் இன்னும் பிற தமிழகத் தலைவர்களும் மட்டுமே கூறி வந்தனர்.

முதன் முறையாக ஈழத்தில் இருந்து இப்படியொரு குரல் கிளம்பியிருப்பது உலகம் முழுக்க தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியிருக்கிறது.

இந்த விவகாரத்தைக் கிளப்பியிருக்கும் அனந்தி ஒருபோதும் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் இல்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சுழிபுரம் இவரது ஊர். அங்குள்ள பிரசித்திபெற்ற விக்டோரியா கல்லூரியில் அக்கவுன்டன்சி பிரிவில் பட்டம் பெற்றவர் இவர்.

விடுதலைப் புலிகளின் ஆளுகையின்போது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நிர்வாக உதவியாளராக அனந்தி பணிபுரிந்தார். 1998இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வவுனியா பகுதி அரசியல் பிரிவு தலைவராக இருந்த சசிதரனை (இயக்கப் பெயர் எழிலன்) இவர் மணந்தார்.

அனந்தியின் சகோதரி வசந்தி. மற்றொரு போராளி இயக்கமான EPRLF இல் இணைந்து பணி செய்தார். போராளி இயக்கங்கள் இடையிலான சகோதரச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக தகவல் உண்டு. அனந்தியின் இளைய சகோதரர் ஒருவரும் புலிகள் இயக்கத்தில் இணைந்து காணாமல் போனவர்தான்.

ஈழ இறுதிப் போரின்போது அனந்தியின் கணவரான சசிதரன் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை பகுதி அரசியல் பிரிவின் தலைவராக இருந்தார். பிரபாகரன் மரணம் அடைந்த நாளாகச் சொல்லப்படும் 2009 மே 18ம் திகதிதான் சசிதரன் சரணடைந்தார். இன்னமும் எனது கணவரையும் சக தோழர்களையும் சிங்களப் படையினர் எங்காவது அடைத்து வைத்திருக்கலாம் என்றே கூறி வருகிறார் அனந்தி.

2009 இறுதிப் போருக்குப் பின்னர் தனது கணவர் உள்ளிட்ட காணாமல் போன தமிழ்ப் போராளிகளை மீட்கும் முயற்சியில் இறங்கினார் அனந்தி.

இதற்காக ஐ.நா. மனித உரிமைப் பிரிவு தலைவராக இருந்த நவநீதம்பிள்ளையிடம் ஒருமுறை நேரிலேயே சந்தித்துப் பேசினார். இலங்கை நீதிமன்றத்தில் இதற்காக ஆட்கொணர்வு மனுக்களையும் தாக்கல் செய்திருக்கிறார். அதிலும் கருணாநிதியின் பெண் வாரிசு பேசிய சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

2013ம் ஆண்டு வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு ஜெயித்தார் இவர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சிங்கள வெறியர்கள் இவர்மீது குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

அனந்தி கிளப்பியிருக்கும் விவகாரம் தொடர்பாக, ஊடகத்திடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வியனரசு, எழிலன் மட்டுமல்ல, புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவரான நடேசன் உட்பட பலரும் தமிழகத்தில் இருந்து தங்களுக்கு வந்த அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் வெள்ளை கொடியேந்தியபடி சரண் அடைந்தார்கள்.

குறிப்பாக கருணாநிதி அவரது பெண் வாரிசு ஒருவர், முந்தைய ஐ.மு.கூட்டணி ஆட்சியின் செல்வாக்குடன் இருந்த தமிழக காங்கிரஸ் மூத்த பிரமுகர் ஒருவர் அவரது மகன், ஒரு பாதிரியார் ஆகியோர் இதில் முக்கிய பங்காற்றியதாக தமிழ் உணர்வாளர்கள் நம்புகிறார்கள்.

என்ன நோக்கத்தில் இவர்கள் சரண் அடைய வைத்தார்கள்? இவர்களுக்கு அந்தப் பணியை கொடுத்தது யார்? அதன் பின்னணி என்ன? என அனந்தி எழுப்பியிருக்கும் கேள்விகள் முக்கியமானவை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே கேள்விகளை நானும் எழுப்பி தனது கடைசிக் காலத்திலாவது கருணாநிதி உண்மையைப் பேச வேண்டும். இல்லாவிட்டால் இவை வெளிவராமலேயே போய்விடும் என கேட்டிருந்தேன்.

இங்குள்ளவர்கள் எழுப்பினால் அதை அரசியல் என கருணாநிதி புறந்தள்ளி விடலாம். ஆனால் ஈழத்தில் உள்ள மக்கள் பிரதிநிதி ஒருவர், அதுவும் இந்த விவகாரத்தின் கண்கண்ட சாட்சியான ஒருவர் கேள்வி எழுப்புவதை அலட்சியப்படுத்த முடியாது.

இதேபோல, 2008 டிசம்பரில் ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றைப் போட்டார் கருணாநிதி. அதில் தமிழகத்தில் உள்ள நாற்பது எம்பிக்களும் ராஜினாமா செய்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் எம்பிக்களிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கிய கருணாநிதி அதை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பவே இல்லை.

அடுத்த 10 நாட்களுக்குப் பின்னர் அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்து பேசிய பிறகு போர் உச்சத்தைத் தொட்டதும் கருணாநிதி மருத்துவமனையில் போய்ப் படுத்துக்கொண்டார்.

மீண்டும் எழுந்து வந்தவர், பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை அலெக்ஸாண்டர் கண்ணியமாக நடத்தியதுபோல் நடத்த வேண்டும் எனக் கூறினார்.

ஆக, இப்படித்தான் நடக்கும் என்பது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அதனால்தான் சரனடைய வைத்த பின்னணி குறித்து நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது என்றார் வியனரசு.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அனந்தியின் புகார் ஆதாரமற்றது எனக் கூறியிருக்கிறார். எனினும் இந்த விவகாரம் சர்வதேச தமிழ் இணைய ஊடகங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க.வை தயார்பப்டுத்தி வரும் ஸ்ராலின் இந்த விவகாரத்தால் அதிர்ச்சி அடைந்ததோடு, ஜூன் 8ம் திகதி முக்கிய நிர்வாகிகள் சிலரை அழைத்து இது குறித்து ஆலோசித்தாராம் அவர். 

இந்நிலையில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர ஆயத்தமாகி வரும் வைகோவுக்கும் இந்த விவகாரம் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

எல்லா விசயங்களுக்கும் கேள்வி பதிலாக -  பதில் சொல்லும் கருணாநிதி அனந்திக்கும் பதில் கொடுப்பாரா.....?

- செல்வா -

ad

ad