தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் குடும்பத்தவர்கள் இருந்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு கிளிநொச்சியில் ஆறு கிராம சேவையாளர்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதே வேளை பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் பேரில் இவர்கள் அறுவரும் இன்று செவ்வாய்கிழமை பூந்தோட்டத்திலுள்ள புனர்வாழ்வு முகாமிற்கு புனர்வாழ்வு பெற செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது.
நான்கு பெண் மற்றும் இரு ஆண்களென ஆறு கிராம சேவையாளர்களே இவ்வாறு புனர்வாழ்வு பெறச் செல்லவுள்ளனர்.
சுமார் ஒன்றரை வருடங்களிற்கு முன்னதாக போட்டிப்பரீட்சையில் தெரிவான இவர்கள் சுமார் ஆறுமாதகால பயிற்சியினை பெற்றிருந்த நிலையில் கடந்த ஒருவருடமாக கிளிநொச்சியின் கரைச்சி பிரதேச செயலக பகுதியில் கடமையாற்றி வந்திருந்தனர்.
சுமார் ஒன்றரை வருடங்களிற்கு முன்னதாக போட்டிப்பரீட்சையில் தெரிவான இவர்கள் சுமார் ஆறுமாதகால பயிற்சியினை பெற்றிருந்த நிலையில் கடந்த ஒருவருடமாக கிளிநொச்சியின் கரைச்சி பிரதேச செயலக பகுதியில் கடமையாற்றி வந்திருந்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டதாக கூறப்படும் ஆலோசனை பிரகாரம் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இவர்கள் அறுவரையும் பணி இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது.
கிளிநொச்சி அரச அதிபரும் புனர்வாழ்விற்கு சென்று மீளக் கடமைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதையடுத்தே அவர்கள் தாமாக முன்வந்து புனர்வாழ்வு முகாம் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதனிடையே முன்னதாக கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வாழ்வு பயிற்சி முடிவடைந்த நிலையில் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் மற்றும் அந்த அமைப்பில் அங்கத்துவம் வகித்தார்கள் என கைது செய்யப்பட்டு பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஆறு பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வு ஆணையாளர் கேணல் எம்.எச்.ஆர்.கமின்டோவின் பணிப்புரைக்கமைய உதவி புனர்வாழ்வு ஆணையாளர் லெப் கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி கப்டன் எச்.எஸ்.டீ.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.