புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை! முதலமைச்சர் உரை!



எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது உருவாகியுள்ளது. உள்ளூர் மக்களும் வெளியூர் உறவுகளும் ஒன்றுசேர்ந்து எமது வடகிழக்கு மாகாணங்களைக் கட்டி எழுப்புங் கடப்பாட்டினைக் கொண்டவர்களாக நாமுள்ளோம். எமது வளங்கள்
பல விதங்களில் பாதிப்படைந்துள்ளன. வளங்கள் சில சூறையாடப்பட்டு பிற மாகாணங்களுக்குக் கரவாகக் கடத்தப்பட்டு வருகின்றன.
எம் நாளாந்த வாழ்க்கை வழமைக்குத் திரும்ப வேண்டுமெனில் இராணுவத்தினர் எமது மண்ணில் இருந்து வெளியேற வேண்டும். “நாங்கள் யாவரும் சகோதரர்கள் எமக்குள் நல்லெண்ணம் மலரட்டும் சுமூகமான உறவுகள் உருவாகட்டும்”
என்றெல்லாம் மேடைகளில் ஏறிக் கூறிவிட்டுப் போரின் போது யுத்தக் குற்றமிழைத்த இராணுவத்தினரைத் தொடர்ந்து எம்மண்ணில் ஆக்கிரமிப்புப் படையாக இருந்து ஆள விடுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று.
எமது மாணவ சமுதாயத்திற்கு மேற்படி தொடர் இராணுவப் பிரசன்னம் பலவிதமான பாதிப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றது. ஆயுதந் தாங்கிய அரச படைகள் அச்சுறுத்தும் இயல்பினைக் கொண்டவர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. எவ்வளவுதான் மக்களைத் தம்வசங்கவருமுகமாக ஒரு இராணுவம் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அல்ல.
பொலிசார் வேறு, இராணுவம் வேறு. பொலிசார் ஆயுதத்தை நம்பி வாழ்பவர்கள் அல்ல. பொலிசார் மக்களுடன் மக்களாக மக்கள் நலம் கருதி கடமையாற்ற வேண்டியவர்கள். அவ்வாறான கடப்பாடு எதுவும் இராணுவத்திற்கு இல்லை. நாட்டின் எல்லைகளைக் காப்பாற்றுவதாகக் கூறி எமது மண்ணையும், வளங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு போர் முடிந்து 6 வருடங்களின் பின்னரும் வேண்டாத எம்மிடையே பலாத்காரமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு அரச படையே இராணுவமும், கடல்படையும்.
எமது பாதுகாப்புக்காக இராணுவத்தை இங்கு நிலை நிறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கின்றது. ஆனால் நாங்கள் எவரும் எங்களைப் பாதுகாக்க நீங்கள் இங்கு இருங்கள் என்று இராணுவத்தினரிடம் கூறியதாகத் தெரியவில்லை.
அவ்வாறு யாராவது கூறியிருந்தால் அவர் இராணுவத்தின் அனுசரணையாளனாகவோ இராணுவத்திற்குப் பயந்தவனாகவோ அல்லது அரசாங்கத்தின் ஒற்றனாகவோ தான் இருக்க வேண்டும்.
அண்மைக் காலங்களில் நடைபெறும் மிகக் கொடூரமான குற்றச் செயல்கள் 2009ம் ஆண்டுக்கு முன்னர் இங்கு மக்களிடையே அறிந்திராத செயல்கள்.
2009க்கு முன்னரான கிருஷாந்தியின் கொலைக்கும் மக்களுக்கும் தொடர்பேதும் இருக்கவில்லை. ஆனால் தற்போது எமது இளைஞர் யுவதிகள் சுதந்திர தாகத்துடன் உருவாகக்கூடாது, அறிவில் சிறந்து விளங்கக் கூடாது, தொழிற் பாங்குடன் கடுமையாக உழைப்பவர்களாக உருவாகக் கூடாது என்று திட்டமிட்டுப் பிழையான வழிகளில் அவர்கள் பாதை தவறி நடக்க உரிய சூழலை யாராவது வழி அமைத்துக் கொடுக்கப் பார்க்கின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.
எந்த ஒரு அரசாங்கமும் தமிழர்களுக்கு நன்மை செய்வோம் என்று வெளிப்படையாகச் சிங்கள மக்களிடையே தெரியப்படுத்தத் தயங்குகின்றது. காரணம் அந்த அளவுக்குச் சிங்களச் சகோதர சகோதரிகள் மனதில் நஞ்சை விதைத்துள்ளார்கள் அரசியல்வாதிகள்.
தமிழர்களுக்குத் தயை காட்டினால் தமக்குத் தேர்தலில் சிங்கள வாக்காளர்கள் தர அடையாளம் போட மாட்டார்களோ என்ற பயத்தில் எல்லாச் சிங்கள அரசியல் தலைவர்களும் கரவாகத்தான் எமக்கு உறுதிமொழிகளைத் தருகின்றார்கள். இது அபாயகரமானது.
1955ம் ஆண்டில் சேர் ஜோன் கொத்தலாவல என்ற அப்போதைய பிரதம மந்திரி வடமாகாணம் வந்து தீவுப் பகுதிகளில் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம அந்தஸ்து வழங்கப் போவதாக அறிவித்தார். 1956ம் ஆண்டில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திரு.S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் 24 மணித்தியாலங்களில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தார்.
சிங்கள மக்கள் பெருவாரியாக பண்டாரநாயக்க அவர்களுக்கு வாக்களித்துத் தேர்தலில் வெற்றி வாகை சூட வழி வகுத்தனர்.
பின்னர் தமிழர்கள் வெகுவாக ஆட்சேபித்ததால் நியாயமான தமிழ்மொழிப் பாவனைக்கான ஒரு சட்ட வரைவைக் கொண்டு வந்தார். உடனே அவரின் வீட்டின் முன் சுமார் 200 பௌத்த பிக்குமார் கூடினர். கூடி பிரதமரை வெளியே அழைத்து என்ன சொன்னார்கள் தெரியுமா?
நாங்கள் யாவரும் மிகவும் பிரயாசைப்பட்டு உங்களைப் பதவியில் ஏற்றியது தமிழ் மொழிக்கு நியாயமான இடம் கொடுக்கவா? இல்லை. சிங்களம் மட்டும் நாடு பூராகவும் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவியைத் தந்தோம் என்றார்கள்.
உடனே அந்தச் சட்டவரைவைப் பண்டாரநாயக்க அவர்கள் பிக்குகள் முன்னிலையிலேயே கிழித்தெறிந்து விட்டார். அடுத்த வருடம் அவர் ஒரு பௌத்த பிக்குவினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையேன் உங்கள் முன்னிலையில் இன்று இதைக் கூறுகின்றேன் என்றால் நாம் கரவாகக் காரியமாற்றினால் தப்பி விடலாம் என்று எண்ணுகின்றோம். அது அவ்வாறு நடப்பதில்லை. இன்று கரவாகத் தமிழர்களுக்கு நாம் உரிய உரித்துக்களைப் பின்னர் பெற்றுக் கொடுப்போம் என்று கூறுவோரை அவர்கள் பதவிக்கு வந்தபின் அவர்களுக்கு வாக்கை அளித்த பெருவாரியான சிங்கள மக்கள் இடமளிக்கமாட்டார்கள்.
சிறிசேன தருவார், ரணில் தருவார், சந்திரிக்கா தருவார் என்று நாம் எண்ணுவதெல்லாம் மடமை. இன்றே நாங்கள் எல்லோருடனும் வெளிப்படையாக ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். இதைத்தான் நாங்கள் செய்வோம். என்று சிங்களத் தலைவர்கள் கூற வேண்டும். இதுதான் எமக்கு வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கூற வேண்டும். கரவாக காரியங்கள் ஆற்றக் கூடாது என்றே கூறி வைக்கின்றேன்.
மாணவச் செல்வங்களிடமும் அதைத்தான் கூறுகின்றேன். உண்மையை உறுதியாகப் பற்றிக் கருமம் ஆற்றுங்கள். உண்மையை நோக்கி வழி நடப்பதால் அதில் வரும் தடங்கல்கள், தாமதங்கள் ஆகியவற்றை ஏற்க நாங்கள் மனமுவந்து ஆயத்தமாக இருக்க வேண்டும்.
பொய்மையும் வாய்மையிடத்தே புரைதீர்த்த நன்மை உண்டாகப் பெறின என்றான் வள்ளுவன். சில சமயங்களில் பொய்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் எம்மை நாடி வரும். ஆனால் அது ஒரு விதிவிலக்கான நடவடிக்கையே. வள்ளுவன் கூறிவிட்டான் என்று பொய்மை வழியையே கடைப்பிடிக்காதீர்கள். பொய்மை ஒரு விதிவிலக்கு. மெய்மையே வழி. இன்னொரு இடத்தில் வள்ளுவன் கூறுகின்றான்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று என்று.
உண்மை வழி நின்றால் வேறு அறங்கள் எதுவுமே செய்ய வெண்டியதில்லை என்கின்றான்.
150 ஆண்டுகள் ஒரு கல்லூரியானது கல்விச் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது பெருமைக்குரிய விடயமாகும். நான் கல்வி கற்ற கொழும்பு றோயல் கல்லூரி அண்மையில் 180 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது.
பழைய கல்லூரிகளில் பாரம்பரியங்கள் பேணப்படுகின்றன. அவற்றிற்கென ஒரு வரலாறு உண்டு. அக்கல்லூரிகளைப் பொறுத்த வரையில் அவை மிகவும் முக்கியமானவை.
எமது சைவத்தமிழ் பாடசாலைகளுள் வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அடுத்த மூத்த பாடசாலையாக உங்கள் கல்லூரி கருதப்படுகின்றது. 1860 களில் திண்ணைப் பாடசாலையாகத் தொடங்கிய உங்கள் கல்லூரி இன்று 150 வருடங்கள் கடந்த நிலையில் இணுவில் இந்து நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் 1 ½ கோடி ரூபா செலவில் புதிய கட்டிடம் ஒன்றைத் திறக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ஓலைக் கொட்டகையாகத் தொடங்கிய பாடசாலை 1978ம் ஆண்டில் மகா வித்தியாலயமாகியது. தற்போது இணுவில் இந்துக் கல்லூரியாகப் பரிணாமம் பெற்றுள்ளது. உங்கள் கல்லூரி இன்றைய வளர்ச்சி பெற அதிபர்கள், ஆசிரியர்கள் பலர் உதவியிருக்கின்றார்கள்.
அவர்களைவிட வெளியார்களும் உதவி உள்ளார்கள். திரு. “கல்கி” சின்னத்துரை, திரு.சங்கரன், திரு.கனகராசா என்போரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“கல்கி” தொழில் அதிபர் திரு.சி.சின்னத்துரையை எனக்கு ஓரளவு தெரிந்திருந்தது. ஆனால் சுபாஸ்கபே உரிமையாளர் திரு.சங்கரன் அவர்கள் அக்காலத்தில் எனக்கு அறிமுகமாகியிருந்த ஒருவர். நான் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றிய போது யாழ்ப்பாணம் வந்தால் திரு.சங்கரனைப் பார்த்து சுகம் விசாரியாது செல்ல மாட்டேன். அவரின் சுபாஷ்கபேயில் ஐஸ்கிறீம் வாங்கிச் சாப்பிடப் போகும் போது அவருடன் அளவளாவி விட்டு வருவேன். திரு.சின்னத்துரை அவர்களுடன் சேர்ந்து திரு.சங்கரன் அவர்கள் உங்கள் கல்லூரிக்கான விஞ்ஞான கூடத்தையும் தொழில் கூடத்தையும் அமைத்துத் தந்தார்கள் என்று அறிகின்றேன்.
அடுத்தது மில்க்வைற் அதிபர் சிவதர்ம வள்ளல் திரு.கனகராசா அவர்கள் உங்கள் குடிநீர் வசதிக்குரிய நீர்த்தாங்கியை அமைத்துத் தந்ததாக அறிகின்றேன். அவரும் எனக்குப் பரீட்சயமானவர். சூழலைச் சுத்தமாக வைத்திருத்தல் பற்றியும் மரங்கள் நாட்டுவது பற்றியும் நாம் இருவரும் ஒரே மாதிரியான கருத்துடையவர்களாக இருந்தோம். அவர் சார்பில் ஆங்காங்கே நடுவதற்காகப் பல மரக்கன்றுகளை நான் மக்களிடம் கையளித்ததுண்டு.
ஆகவே உங்கள் கல்லூரி பலரின் கொடையினால் பலரின் அன்பினால் வளர்ந்து வந்துள்ள ஒரு கல்விக் கூடம். இன்று 1 ½ கோடி செலவில், அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராமல் இந்தக் கட்டிடத்தைப் ப+ர்த்தி செய்து தந்துள்ளார்கள் இணுவில் இந்து நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தார். 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில் 9030 அடி இருமாடிக் கட்டிடத்தைத் தந்துதவியுள்ளார்கள் மேற்படி நிதியத்தார். அத்துடன் முன்பக்க வளைவையும் மேற்படி நிதியமானது பழைய மாணவர், நலன் விரும்பிகள், கல்லூரி உறவுகள் போன்றவர்களுடன் இணைந்து அமைத்துத் தந்துள்ளது.
இன்று உங்கள் கல்லூரி கல்வித் துறையிலும் விளையாட்டுத் துறையிலும் ஏன் நாவன்மை, சித்திரம், கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்ற பல்வேறு பட்ட துறைகளிலும் வெற்றி நடைபோட்டு வருகின்றது. அதற்குத் தற்போதைய உங்கள் அதிபர் அவர்கள் எமது பாராட்டுக்குரியவர்.
ஆகவே நூற்றைம்பது வருடங்களை எட்டியிருக்கும் என் இனிய இணுவில் இந்துக் கல்லூரி மாணவச் செல்வங்களுக்கு இந்த முதுமையுடைய முதலமைச்சர் தரும் முது மொழி “உண்மையுடன் நடந்து கொள்ளப் பழகுங்கள்” என்பது. உண்மை பேசுதல், உண்மையுடன் நடந்து கொள்வது, உண்மைக்காகப் போராடுதல் எமது கடப்பாடாகும். பொய்மையை விடுத்து உண்மையை நாடுவோமாக! எமது வாழ்க்கையில் உண்மையை உட்புகுத்தி உரிய நலம் பெறுவோமாக!
உங்கள் கல்லூரி மென்மேலும் உயர்ந்து வளர்ந்து விருட்சமாய்ப் பரிணமித்து எங்கள் மாணவச் செல்வங்களுக்கு நன்நிழல் அளிப்பதாக என்று வாழ்த்தி அமர்கின்றேன்.

ad

ad