புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2015

அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு பி பி சி


தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேவேளை, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு அனந்தி சசிதரன் தமிழரசுக் கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தத்தேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக அவர் முறையாக விண்ணப்பித்திருந்தால், அவரை அழைத்து தாங்கள் பேசியிருப்போம் என்றும் மாவை சேனாதிரஜா பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமிழரசு கட்சியின் சார்பில் வேட்பாளர்களாவதற்குப் பலர் விண்ணப்பம் செய்திருக்கின்ற நிலையில் விண்ணப்பம் செய்யாத அனந்தியை எவ்வாறு வேட்பாளராக நியமிக்க முடியும் என்றும் சேனாதிராஜா கேள்வி எழுப்பினார்.
"தமிழரசுக் கட்சியிடம் கேட்பதற்குப் பதிலாக ஊடகங்களிடம் நாங்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் தரவில்லை என்று அனந்தி கூறி வருகிறார்", என்றும் சேனாதிராஜா குற்றம் சுமத்தினார்.
null
தமிழரசுக் கட்சி தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று அனந்தி விமர்சனம்
அனந்தி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியின் சார்பில் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கேட்டபோது, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தையும் தான் நிராகரிப்பதாகத் தெரிவித்த கருத்துக்கு மாத்திரமே தனக்குக் கட்சியிடம் இருந்து கடிதம் வந்ததாகவும், வேறு எந்த விடயம் குறித்தும் தனக்குக் கடிதம் அனுப்பப்படவில்லை என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென்றும் அனந்தி மறுத்தார்.
இந்தச் சம்பவம் குறித்து முறையான ஒரு விசாரணை நடத்தப்பட்டிருக்குமானால், தனது நிலைப்பாட்டைத் தான் நிரூபித்திருக்க முடியும் என்றும் அனந்தி சசிதரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பு மனுக்கள் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என கேட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் தனித்து சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும், அந்த மக்களின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் வெற்றியீட்டப் போவதாகவும் அனந்தி சசிதரன் பதிலளித்தார்.

ad

ad