நீதிமன்றம் தாக்கப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரை
யாழ்.நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியதுடன் ஏனையவர்களுக்கான பிணை விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது.
குறித்த வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றையதினம் சந்தேகநபர்கள் 30 பேர் மன்றிற்கு முன்னிலையாகியிருந்தனர்.
மேலும், மூன்று வழக்குகள் இவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்குகளை விசாரணை செய்த நீதவான் குறித்த மூன்று வழக்கில் இருந்தும் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மாணவனுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மாணவன் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்துஆட்பிணையில் செல்லலாம் என்றும் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோரினால் உறுதி செய்யப்பட்ட கடிதம் மன்றிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அத்துடன் நன்னடத்தை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிர்காலத்தில் ஏதாவது குற்றங்கள் செய்தால் பிணை நிராகரிக்கப்பட்டு வழக்கு முடிவுறும் வரை பிணை வழங்கப்படாது என்றும் நீதவான் தெரிவித்தார்.
ஏனைய 29 சந்தேகநபர்கள் தொடர்பில் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பங்களில் விதிவிலக்கான சந்தர்ப்பங்கள் இல்லை என்றும் இதனால் பிணை வழங்க முடியாது எனவும் பிணை தேவையெனின் மேல் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்து விண்ணப்பங்களை நீதவான் நிராகரித்தார்.
குறித்து 29 பேரையும் எதிர்வரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வாகன விடுவிப்புக்கு அனுமதி கோரியவர்களின் மோட்டார் சைக்கிள் 2இலட்சம் ரூபா பிணை முறியிலும் முச்சக்கரவண்டி 3 இலட்சம் ரூபா பிணை முறியிலும் பெற மன்று அனுமதி வழங்கியது. எனினும் வழக்கு முடியும் வரை கைமாற்றவோ விற்கவோ முடியாது என்றும் மன்று அறிவித்துள்ளது.