அரசியல் அதிகார மோகம் பிடித்து அலைந்து திரியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பவே நாங்கள் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானித்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நேற்று கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவே புதிய கட்சியை நாம் உருவாக்கியுள்ளோம்.இதன்படியே வேட்பு மனு கையளிக்கப்படும்.
நாங்கள் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அதிகாரத்திற்குள் வந்தால் நாடு நாசமாகிவிடும். தமது குடும்ப எதிர்காலமா அல்லது மகிந்தவின் குடும்பத்தின் எதிர்காலமா ? என்பதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதி மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்தோம். அந்த வெற்றியை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.
மகிந்த ஆட்சியில் நாட்டின் அபிவிருத்தியை விட்டு அவர்கள் சம்பாதிப்பதிலேயே ஈடுபட்டனர். கல்வி , சுகாதாரம் போன்ற துறைகளில் பாரிய பிரச்சினைகள் இருந்தன. அத்துடன் வேலையில்லாப் பிரச்சினை காணப்பட்டது. உணவுப்பொருட்களுக்கு விலை அதிகரிப்பு இதனால் மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு மக்கள் இருந்தநிலையில் ராஜபக்ச குடும்பம் ஹல்டன் கோட்டலில் சொகுசாக உணவு உட்கொண்டனர். தங்கக்கரண்டிகளால் உணவும் உண்டனர்.
மேலும் தேர்தலுக்கு பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசில் 5 விடயங்களை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் .நாடு பூராகவும் 48 பொருளாதார பிரதேசங்களை உருவாக்கவுள்ளோம்.
புதிய தொழில்துறைகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளோம்.அத்துடன் முச்சக்கர வண்டி சாரதிகள் விபத்தில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபா வரை நஷ்டஈடாக வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.