புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2015

அப்துல்கலாமின் இறுதிச்சடங்கில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை!

ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறவுள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் உடல்நிலை
காரணமாக பங்கேற்க இயலவில்லையென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தர்ராஜ், ஆர்.பி. உதயகுமார் போன்ற அமைச்சர்களும் இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றனர்.
ரமேஸ்வரத்தில் நாளை காலை 11 மணியளவில் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி மற்றும் பல மாநில முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதல்வர் அறிக்கை...
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவராலும் போற்றப்பட்டவரும், அனைவரது நெஞ்சில் நிறைந்தவரும், தமிழகத்தின் தலைசிறந்த மைந்தருமான பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவினால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

ராமேஸ்வரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்து சக்தியாக விளங்கினார். ஏவுகணை உருவாக்கம், அணுசக்தித் திட்டங்கள் ஆகியவற்றில் அவருக்கு மிகுந்த பங்களிப்பு இருந்த போதிலும், போலியோ பாதித்தவர்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவி ஆகியவற்றை உருவாக்கியதில் மன நிறைவு கண்டவர் அப்துல் கலாம்.

'நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்' என்ற அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் அப்துல் கலாம் அவர்கள். அப்துல் கலாம் அவர்களது நல்லடக்கம், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் 30.7.2015 அன்று நடைபெறவுள்ளது. அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எனது உத்தரவின் பேரில் இதற்கென அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எனவே, அவரது இறுதிச் சடங்கில் பங்குகொண்டு எனது மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். இருப்பினும், எனது உடல்நிலை காரணமாக என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.

எனவே, எனது சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், ஓ.பன்னீர்செல்வம், நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர், நத்தம் இரா.விசுவநாதன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர், ஆர்.வைத்திலிங்கம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர், எடப்பாடி கே.பழனிசுவாமி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர், பி.பழனியப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர், எஸ்.சுந்தரராஜ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் ஆர்.பி.உதயகுமார், வருவாய் துறை அமைச்சர் ஆகியோரை இராமேஸ்வரம் சென்று இறுதி மரியாதை செலுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அன்னாரது இறுதிச்சடங்கு நடைபெறும் நாளான 30.7.2015 அன்று அரசு விடுமுறை அளிக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறி உள்ளார்

ad

ad