இந்தியா- இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 393 ஓட்டங்கள் எடுத்தது.
ராகுல் (108) சதம் அடித்தார். அணித்தலைவர் விராட் கோஹ்லி (78), ரோஹித் (79), சஹா (56) ஆகியோர் அரைசதம் எடுத்தனர். இலங்கை தரப்பில், ஹேராத் 4, பிரசாத், மேத்யூஸ், சமீரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 306 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அணித்தலைவர் மேத்யூஸ் (102) சதம் அடித்தார். திரிமன்னே (62), சில்வா (51) அரைசதம் விளாசினர்.
இந்தியா தரப்பில் மிஸ்ரா 4, இஷாந்த், அஸ்வின் தலா 2, யாதவ், பின்னி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 87 ஓட்டங்கள் முன்னிலையில் 2ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 325 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அணித்தலைவர் விராட் கோஹ்லி டிக்ளேர் செய்து கொள்வதாக அறிவித்தார்.
முரளிவிஜய் (82), ரஹானே (126) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கை சார்பில் பிரசாத், கவுஷால் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதனால் இலங்கை அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சில்வா (1) ஏமாற்றம் அளித்தார்.
தனது கடைசி இன்னிங்சில் களமிறங்கிய சங்கக்காரா 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 72 ஓட்டங்கள் எடுத்து 341 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.
அணித்தலைவர் மேத்யூஸ் (23), கருணாரத்னே (25) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
தொடர்ந்து விளையாடிய அணித்தலைவர் மேத்யூஸ் (23) யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சந்திமால் (15), திரிமன்னே (11) வரிசையாக வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
அடுத்து வந்த முபாரக், பிரசாத் டக்-அவுட்டாகி வெளியேற, ஹெரத் 4 ஓட்டங்களுடனும்,கவுசல் 5 ஓட்டங்களுடனும், சமிர 1 ஓட்டங்களுடனும் இலங்கை 134 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பாக அஸ்வின் 5 விக்கெட்டுக்களை எடுத்து அசத்தினார்.
மேலும் சங்காவை தோல்வியுடன் வழியனுப்பி வைத்தனர் இலங்கை அணி.