புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

முதல் அப்துல் கலாம் விருது பெற்ற பெண் விஞ்ஞானி வளர்மதி

முதல் அப்துல் கலாம் விருதை தமிழக முதல்வரிடம் இருந்து பெற்றுள்ளார் இஸ்ரோ இயக்குநரான பெண் விஞ்ஞானி வளர்மதி.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் அந்த விருதானது, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என்று கூறி இருந்தார்.

இன்று நாட்டின் 69வது சுதந்திர தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சுதந்திர தின விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதன்பின் முதல்வர் சுதந்திர தின உரையாற்றிவிட்டு விருதுகளை வழங்கினார். அதில், அவர் ஏற்கனவே அறிவித்திருந்தபடி இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதை, இஸ்ரோ திட்ட இயக்குநர் விஞ்ஞானி வளர்மதிக்கு வழங்கினார். விருதுடன் விஞ்ஞானி வளர்மதிக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி சிறப்பித்தார்.
இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைக்கோள் திட்டங்களில் தொலையுணர்வு செயற்கைக்கோள் திட்டத்தின் முதல் பெண் இயக்குநர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது

கலாம் விருது பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி...

கடந்த 2012-ல் ரிசாட் 1 செயற்கைக்கோள், இந்தியா சார்பில் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டு தங்குதடையின்றி விண்வெளியைத் தொட்டு வெற்றிபெற்றபோது தேசமே கொண்டாடிய பெயர்... வளர்மதி! அந்த செயற்கைக் கோளின் திட்ட இயக்குநரான இந்த இஸ்ரோ விஞ்ஞானி... அரியலூர் தமிழச்சி!

ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், சரல், ஜிசாட் 7, மார்ஸ் மிஷன், ஜிசாட் 14 என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர், தற்போது குரூப் டைரக்டராக உயர்ந்துள்ளார். தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் பிறந்தவரான இவர், 'விஞ்ஞானமும் பெண்களுக்கு கைவரப்பெற்றதே' என்றபடி இன்று 'இஸ்ரோ’வில் கோலாச்சும் பயணம்... பலருக்கும் தன்னம்பிக்கைப் பாடம்!

''அப்பா நடராஜன், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அம்மா ராமசீத்தா இல்லத்தரசி. எங்கள் வீட்டில் மூன்று பிள்ளைகள், நான்தான் மூத்தவள். அதனாலேயே அப்பாவுக்கு என்மீது பிரியம் அதிகம். அரியலூர், நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படித்தேன். இயற்கையாகவே எனக்குள் ஒரு சுபாவம் உண்டு. திறமையானவர்களைப் பார்த்தால், அவர்களைப்போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன். ஒரு ஓவியரைப் பார்த்தால்... நானும் அவர் போல வரைய முயற்சி செய்வேன். உயிருக்குப் போராடும் ஒருவரைக் காப்பாற்றும் மருத்துவரைப் பார்த்து, 'நானும் ஒருநாள் டாக்டராகணும்’ என்று நினைப்பேன். சாத்தியமா... இல்லையா என்றுகூட சிந்திக்கத் தெரியாத அந்த வயதில், எல்லா துறைகளின் மீதும் ஆசை. ஊருக்குச் சென்றால், மாமா பிள்ளைகள், பெரியப்பா பிள்ளைகள் என எல்லோரையும் பக்கத்தில் அமரவைத்து, தெரிந்த விஷயங்களை சொல்லிக்கொடுப்பேன்.

கோவை, அரசுக் கல்லூரியில் பி.இ., எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் சேர்ந்தபோது, வெளியுலகம் தெரியாத குடும்பச் சூழலில் வளர்ந்த நான், சின்னச் சின்ன பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது. என் ஏழ்மையும், மற்றவர்களின் ஆங்கிலப் புலமையும் எனக்குள் ஆரம்பத்தில் மிரட்சியை ஏற்படுத்தியது. தளராமல், தயங்காமல் நானே சரிசெய்துகொண்டேன். சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., கம்யூனிகேஷன் சிஸ்டம் சேர்ந்தேன். பள்ளிப் படிப்பை முடிக்கும் வரைக்கும் கிராமத்து மாணவியாகவே வளர்ந்த நான், புத்தகங்கள் படிப்பது, ஆங்கில அறிவு, தைரியம், தன்னம்பிக்கை என்று அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டேன். இப்படியான தன்னார்வ தேடலில்தான், வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சாதாரணமாக எதிர்கொள்ளும் தைரியம்... இலவசப் பரிசாக எனக்குக் கிடைத்தது.
எம்.இ. படிப்பில் நான் எடுத்த நல்ல ரேங்க், 84-ம் ஆண்டில் 'இஸ்ரோ' வேலையை வாங்கிக் கொடுத்தது. வேலைக்குச் சேர்ந்த அந்த நாளின் நினைவுகள் அனைத்தும், அப்படியே மனதில் இருக்கின்றன. என் பெற்றோர் என்மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிய நாள் அது, என் வாழ்க்கையில் முதல் வெற்றி துவங்கிய நாள்!

படிக்கும் காலத்தில், 'விஞ்ஞானி ஆவேன்' என்று கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், எந்தப் பணியாக இருந்தாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற பண்பை இளமையிலேயே கட்டமைத்துக்கொண்டேன். இஸ்ரோவில் 25 வருட உழைப்பு, என்னை குரூப் டைரக்டராக உயர்த்தியுள்ளது. இப்போது என் குழுவில் 75 பேர் வேலை செய்கிறார்கள். சில நேரங்களில் நூற்றுக்கணக்கானவர்களுடன் இரவு, பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். முதலில் எனக்குள் கொஞ்சம் பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. ஆனால், பெண் என்ற வேலியை அறுத்து என் பொறுப்பை உணர்ந்து வேலை செய்யத் துவங்கிய கணத்தில், எந்தச் சூழலும் எனக்குச் சுலபமாக மாறியது.

பொறுப்புகள் நிறைந்த வேலை, மன அழுத்தம் சேர்ந்துவிடும், குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது... என எந்த சிரமங்களையும் என் வேலை குறித்து நான் குறிப்பிடமாட்டேன். என்னுடைய பையில் எப்போதும் ஒரு கேலண்டர் வைத்திருப்பேன். அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வேன். திட்டமிடுவதுதான் வாழ்க்கையில் அனைத்தையும் சுலபமாக்கியுள்ளது. இதனால் பணி நிறைவு கிடைத்ததே தவிர... வலிகள், வேதனைகள் என்று எதையும் என் வேலை எனக்குத் தந்ததில்லை. குடும்பத்திலும் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதில்லை. கணவர் வாசுதேவன், பிள்ளைகள் தீபிகா, ஹேமந்த் என குடும்பத்தினரின் ஒத்துழைப்பையும் குறிப்பிட்டாக வேண்டும். இரவு, பகலாக நான் உழைத்த நேரங்களில் எல்லாம், எனக்கு தட்டிக்கொடுத்த கணவர் கிடைத்தது, என் பாக்கியம்'' என்று பெருமையோடு குறிப்பிட்ட வளர்மதி,

''பெண்களின் முன்னேற்றம் என்று பேசும்போது, ஆண்களுக்கு அடுத்த கட்டத்தில் பெண்கள் இருந்த நிலை மாறிவிட்டது. எல்லா துறைகளிலும் ஆண்களைப் பின்தள்ளி பெண்கள் முதலிடத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் இன்றைய உலகில் விரிந்துகிடக்கின்றன. அதைஎல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ஆண்களுக்கு நிகர்’ என்பதற்காக நடுராத்திரியில் நானும் வெளியில் திரிவேன், ஆண்களைப் போலவே உடை அணிவேன் என்றெல்லாம் வெளிப்படுத்தத் தேவைஇல்லை. மேலும், வெற்றிகளைக் குவிக்க ஆண் போல செயல்பட வேண்டியதில்லை. நிதானம், பொறுமை, அரவணைப்பு என பெண்மைக்கான குணங்களே போதும். அப்படித்தான் நான் முன்னுக்கு வந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாலேயே, என்னால் இவ்வளவு தூரம் தேக்கமில்லாமல் பயணிக்க முடிந்திருக்கிறது.

அலுவலகம் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒரு மணி நேரத்தைக்கூட வீணடித்ததில்லை. புத்தகங்கள் படிப்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது, துறை சார்ந்த நவீனத்துடன் இணைந்தே பயணிப்பது, நம்மைச் சுற்றியிருப்பவர்களைச் சந்தோஷப்படுத்துவது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்தினருக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுப்பது என... சோம்பல் என் பது என்னை அடையாமல் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அதுதான் என்னை உயர்த்திக்கொண்டே வருகிறது என்று நம்புகிறேன்!''

அப்போ... இப்போ!

''நான் 1984-ல் வேலைக்குச் சேர்ந்தேன் அப்போதெல்லாம், ஒட்டுமொத்த 'இஸ்ரோ'விலும் 25-க்கும் குறைவான பெண்கள்தான் பணியாற்றினார்கள். உயர் பதவியை அலங்கரித்த பெண்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம். காலை 10 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு வீட்டுக்குச் செல்லக்கூடியதாக இருக்காது வேலை. அப்படி பிரதிபலன் பாராது உழைத்த எங்களைப் பார்த்து, மற்ற பெண்களும் உழைக்க ஆரம்பித்தார்கள். இதற்கு பலனாக அடுத்தடுத்த பொறுப்புகளையும், பதவிகளையும் பெண்களுக்கு வழங்கியது இஸ்ரோ.

இன்று இஸ்ரோ பணியாளர்களில் 3-ல் ஒரு பங்கு பெண்கள் எனும் அளவுக்கு இடம்பிடித்திருக்கிறோம். தனிப்பட்ட திறமையும், கடும் உழைப்பும் மட்டுமே இதற்கெல்லாம் காரணம். உடன் வேலை செய்யும் ஆண்கள், அன்றும் சரி, இன்றும் சரி... ஒருபோதும் பெண்களின் வெற்றிக்குத் தடையாக இருந்ததில்லை.'

ad

ad