தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நியமனமானது கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 14 உறுப்பினர்களை பெற்றிருந்தது. இதனடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த இரு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனங்கள் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்திருந்தனர். திருகோணமலையில் இரு தடவைகள் இத்தகைய சந்திப்புக்கள் இடம்பெற்றன. இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புௌாட் ஆகிய கட்சிகளின் சார்பில் ஒருவரை நியமிக்கவேண்டுமென்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மற்றையவரை நியமிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் கூட்டுக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தோல்வியை தழுவியிருந்தார். இவருக்கு தேசிய பட்டியலில் நியமனம் வழங்கப்படவேண்டுமென்று அக்கட்சியினர் உட்பட பல பொது அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்திருந்தன. இதேபோல் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப்பட்டியலில் போட்டியிட்டிருந்த அருந்தவபாலனும் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த விடயத்தில் விருப்பு வாக்கில் மோசடி செய்யப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிவந்தனர்.
இதனால் அருந்தவபாலனையும் தேசிய பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கவேண்டுமென்றும் கோரிக்கை எழுந்திருந்தது. திருகோணமலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இல்லத்தில் முதல்நாள் நடைபெற்ற கூட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனை தேசிய பட்டியலில் நியமிக்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, புௌாட் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருவரது பெயரை தருமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியிருந்தார். ஆனாலும் சுரேஷ் பிரேமச்சந்திரனை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை விரும்பவில்லையென்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ கட்சியினர் ஒன்று கூடி தமது சார்பில் கட்சியின் முக்கியஸ்தர்களான என். சிறிகாந்தா, எம்.கே. சிவாஜிலிங்கம், ஹென்றி மகேந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா) ஆகிய நால்வரில் ஒருவரை தேசிய பட்டியலுக்கு நியமிக்குமாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கடிதம் மூலம் கோரியிருந்தனர்.
உண்மையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய சுரேஷ் பிரேமச்சந்திரன் இம்முறை தோல்வியை தழுவியமை கவலைக்குரிய விடயமாகவே உள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்பின் கூட்டுக்கட்சிகளின் தலைவர் ஒருவர் தோல்வியடைந்த நிலையில் அவரை தேசியப் பட்டியலில் நியமித்திருந்தால் கூட்டமைப்பிற்குள் நல்லெண்ணம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறான செயற்பாடு அரசியல் போட்டா போட்டி காரணமாக இடம் பெறவில்லையென்றே தெரிகின்றது.
தற்போதைய நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும் தேசிய பட்டியல் விடயத்தில் ஒரு நிலைப்பாட்டிற்கு வராமையினாலேயே தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூட்டமைப்பின் தலைமை காரணம் கூறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே ரெலோ, புௌாட், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிகளின் தலைமை ஒரேபிடியாக ஒருவரை நியமிக்கவேண்டுமென்று கோரியிருந்தால் அந்தக் கோரிக்கைக்கு தமிழரசுக் கட்சியின் தலைமை செவிசாய்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிக்கும். ஆனால் அந்த விடயத்தில் இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைய தவறிவிட்டன.
இந்த நிலையில் தற்போது திருகோணமலையில் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த கே. துரைரட்ணசிங்கமும், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்த திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவும் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருமே தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதனால் இந்த நியமனம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டிருக்கின்றது. அது தற்போது ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தப்பட்டு வருவதையும், காணக்கூடியதாக உள்ளது.
தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் நியமனமானது தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முடிவல்ல. அது தன்னிச்சையாகவும், ஒரு தலைப்பட்சமாகவும், தமிழரசுக்கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவாகும் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட நான் தோல்வியடைந்தையடுத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருக்கும் ஒரு கட்சியின் தலைவரான எனக்கு தேசிய பட்டியலில் இடமளிக்கவேண்டுமென கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆயினும் அந்தக் கோரிக்கை தொடர்பில் சரியான முடிவு எடுக்கப்படாமல் தமிழரசுக்கட்சி தனது விருப்பத்திற்கு இரண்டுபேரை தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமித்துள்ளது. இத்தகைய முடிவு கூட்டமைப்பின் தத்துவங்களுக்கு நல்லதல்ல. இதனை மிகவும் வெட்கம்கெட்டதனமாக தமிழரசுக்கட்சி செய்துள்ளது என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.
இவ்வாறு இந்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிரேமச்சந்திரனுக்கு பதில் கூறவேண்டிய அவசியம் எனக்கில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு தேசிய பட்டியலில் ஒவ்வொரு இடம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டமைப்பின் சார்பில் பெண்ணொருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிணங்கவே தேசிய பட்டியல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ளார்.
இவ்வாறு தேசியப் பட்டியல் விவகாரத்தில் கூட்டமைப்பின் தலைவர்கள் பகிரங்கமாக கருத்துமோதலில் ஈடுபடும் நிலை உருவாகியிருக்கிறது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புௌாட் ஆகிய கட்சிகளின் தலைவர்களும் இந்த நியமன விடயத்தில் கடும் எதிர்ப்பையே தெரிவித்துள்ளனர்.
உண்மையிலேயே தமிழ் கட்சிகள் தமிழ் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து நிற்பதனாலேயே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு தமது பெரும்பான்மையான ஆதரவினை வழங்கிவருகின்றனர். 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நடைபெற்று வரும் ஒவ்வொரு தேர்தலிலும், அதற்கான ஆணையினை வடக்கு, கிழக்கு மக்கள் வழங்கியே வருகின்றனர்.
இந்த நிலையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைகள் வெறுமனே தேர்தல் அரசியல் மற்றும் சுயநல அரசியல் செயற்பாடுகளை விடுத்து மக்களின் நலன் கருதி பொதுவான செயல்முறையின் அடிப்படையில் செயற்படவேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்த போதிலும், அதற்கான நடவடிக்கைகளும் இன்னமும் எடுக்கப்படவில்லை. தற்போது தேசிய பட்டியல் நியமன விடயத்தில் பெரும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது.