புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2015

மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டம்: விஜயகாந்த் கைது; தேமுதிகவினர் மீது தடியடியால் பதட்டம்!


 மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, தடையை மீறி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டார். மேலும் அக்கட்சி தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என தே.மு.தி.க. சார்பில் கடந்த இரு
தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கும் காவல்துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

ஆனால், ஒரு போராட்டம் நடத்துவதற்கு சுமார் 5 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி கேட்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே அமலில் உள்ளது எனக் கூறி, தே.மு.தி.க.வின் போராட்டத்திற்கு  காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தே.மு.தி.க. சார்பில் இன்று கோயம்பேடு முதல் கோட்டை வரை என்ற விதத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விஜயகாந்த் கைது 

கோயம்பேட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த காவல்துறையினர், அனுமதியின்றி போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறினர். அதையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால், விஜயகாந்த் உள்பட அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது, காவல்துறைக்கு எதிராக தே.மு.தி.க.வினர் கோஷங்களை எழுப்பினர்.
பிரேமலதா கைது 

இதேபோல் சென்னை சென்ட்ரல் அருகே விஜயகாந்த் மனைவி பிரேமலதா தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. பிரேமலதா அங்கு வருவதற்கு முன்பே, தே.மு.தி.க.வினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர்.

இதனால், தே.மு.தி.க.வினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்த சில தே.மு.தி.க. கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் தடுத்ததோடு, போராட்டத்தில் ஈடுபட முயன்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது அங்கு வந்த பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தற்போது, தமிழகத்தில் மதுவால், சிறுவர்கள் முதல் பெண்கள் வரை என எல்லோரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுவால் பாதிக்கப்படாத குடும்பமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தின் நிலை உள்ளது. இதனால், மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சாலையோரம் அமைதியாகதான் தே.மு.தி.க.வினர் போராட்டம் நடத்தினர். ஆனால், அறவழியில் போராட்டம் நடத்தும் தே.மு.தி.க.வை காவல்துறையில் தடுப்பது எந்த வகையில் நியாயம்.

தமிழகத்தில் மதுவிலக்கு அவசியமா? இல்லையா? என மக்களிடமே கேட்கிறோம். இப்போது மட்டும் ஏன் மதுவிலக்கை கையில் எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். தற்போது, காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்குக்காக போராடும்போது, போராட்ட களத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதன் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மதுவிலக்கை அமல்படுத்தும் வரை தே.மு.தி.க. ஓயாது'' என்றார்.

இதையடுத்து, சாலையில் அமர்ந்து பிரேமலதாவும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
தேமுதிகவினர் மீது தடியடி
இதேபோல், சென்னை கோயம்பேடு அருகே மனித சங்கிலி போராட்டத்தில் தே.மு.தி.க.வினர் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவர்களை ஏற்றிய பஸ்சின் கண்ணாடிகளை தே.மு.தி.க.வினர் உடைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த பஸ்சை ஓட்ட விடாமல் ஓட்டுநரை தடுத்ததாகவும் கூறி, தே.மு.தி.க.வினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

தே.மு.தி.க.வின் திடீர் போராட்டம் மற்றும் விஜயகாந்த் கைதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ad

ad