சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். லாரி உரிமையாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண புரோக்கர்கள் மூலமாக திருமணத்திற்கு மணப்பெண் பல இடங்களில் பார்த்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த புரோக்கர் இளங்கோவன், சுரேஷ்குமாருக்கு குமணன்குட்டையில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணை மணப்பெண்ணாக காட்டியுள்ளார். சுரேஷ்குமாருக்கு லட்சுமியை பிடித்ததால் புரோக்கர் இளங்கோவனுக்கு 40 ஆயிரம் கமிஷனாக கொடுத்துள்ளார்.
இதைதொடர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்த சுரேஷ்குமார் 27-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக பத்திரிக்கை அடித்து கொடுத்துவந்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரத்தில் திடீரென சுரேஷ்குமாரை தொடர்புகொண்ட புரோக்கர் இளங்கோவன் மணப்பெண் லட்சுமியை ஏற்கனவே பார்த்து சென்ற வேறு ஒரு மாப்பிள்ளையிடம் 60 ஆயிரம் அட்வான்ஸ் தொகை வாங்கியதாகவும், இப்போது அந்த மாப்பிள்ளை நீங்கள் பார்த்து சென்ற மணப்பெண் லட்சுமியை கடத்திச் செல்வதாக மிரட்டுவதாகவும். 60 ஆயிரம் கொடுத்துவிட்டால் பிரச்சனை வராது எனக்கூறியுள்ளார். லட்சுமியை திருமணம் செய்து கொள்ளவதற்காக மீண்டும் 60 ஆயிரம் கொடுத்துள்ளார் சுரேஷ்குமார்.
இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு மணமகன் சுரேஷ்குமாரை மீண்டும் தொடர்புகொண்ட புரோக்கர் இளங்கோவன், மணப்பெண் லட்சுமிக்கு உங்களை பிடிக்கவில்லையாம் இதனால் லட்சுமி சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. ஆகவே திருமணத்தை ஒருவாரம் தள்ளிப்போட வேண்டும் எனவும் அதற்குள் லட்சுமியை சமாதானப்படுத்தி வைக்கிறேன் எனவும் புரோக்கர் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த சுரேஷ்குமார் நண்பர்களோடு ஈரோடு வந்து மணப்பெண் வீட்டில் பார்த்துள்ளார். வீடு பூட்டி இருந்துள்ளது. அருகில் விசாரித்ததில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி கோயம்புத்தூர் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. பின் கோயம்புத்தூர் சென்று தேடியுள்ளனர். ஒருவழியாக புரோக்கர் இளங்கோவனை பிடித்து விசாரிக்கையில் மணப்பெண் லட்சுமியாக நடித்தது சரிதா என்ற பெண் என்றும், ஏற்கனவே திருமணமாகி சரிதாவுக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை பிரிந்து வாழும் சரிதா புரோக்கர் இளங்கோவனுடன் சேர்ந்து கொண்டு மணப்பெண் போல நடித்து திருமணம் ஆகாத இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிப்பதை தொழிலாக செய்து வருவது தெரியவந்தது.
பணமும் போய், மணப்பெண்ணும் போய் மாப்பிள்ளை சுரேஷ்குமார் ஏமாந்து நின்றார். இன்னும் எத்தனை மாப்பிள்ளைகள் இதுபோன்று திருமணம் ரத்தாகி ஏமாந்திருப்பார்களோ.