யாழ்.நகரப் பகுதியில் கடந்த வாரம் காடைத்தனமான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலை ஆசிரியையின் கணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுமணத்த தம்பதிகளாய் குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்த சக ஆசிரியர்களுக்கு நடைபெற்றுள்ள கொடூரமான சம்பவமானது,
ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்று அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த வேளையில் மக்கள் நிம்பதியாக வாழமுடியாத சூழலே காணப்படுகின்றது என்பதையே காட்டுகின்றது.
வயதைக் கூட மதிப்பிடாமல் தெருவில் கூடும் காடையர்களின் அட்டகாசங்களால் ஆசிரியர்கள் கூட நையப்புடைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொலை செய்யப்படுகின்றார்கள் என்றால் - பொலிசாரின் நடவடிக்கைகளிலும் சந்தேகம் ஏற்படுகின்றது.
இன்று ரவுடித்தனங்களை அடக்கி யாழ்குடாநாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முனையும் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் முயற்சிக்கு வேண்டுமென்றே முட்டுக்கட்டடை போடுவதற்காக சில தீயசக்திகளுடன் இணைந்து பொலிசாரும் உடந்தையாக செயற்படுகிறார்களா? என்னும் சந்தேகம் எழுகின்றது.
இப்படியான காடைத்தனங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நிலவும் போதைப்பழக்கமும் முக்கிய காரணமாகின்றது. எனவே இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் சம்பத்தப்பட்ட தரப்பு முயலவேண்டும்.
பொலிஸாருக்கு மேற்படி அசம்பாவிதங்கள் தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும், அதனை அவர்கள் விரைந்து செயற்படுத்தாத தன்மைகள் பாரதூரமான விளைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
யாராக இருப்பினும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதித்துறை பாரபட்சம் காட்டாமல் தண்டனை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட யாழ்.இந்து ஆரம்பப்பாடசாலையின் ஆசிரியைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பாடசாலை சமூகத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் தொவிக்கப்பட்டுள்ளது.