T
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை
மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சாஸ்திரிபவனை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் து.வெ.வேணுகோபால், வேந்தர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாஸ்திரிபவனை முற்றுகையிட சென்ற போது அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். முன்னதாக, தி.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக தமிழக முதல்–அமைச்சரால் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டமன்றத்தின் 4 தீர்மானங்களையும் மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். தமிழக அரசின் தீர்மானத்துக்கு மதிப்பு அளிக்காமல், தமிழர்களுக்கு விரோதமான அரசாகவும், இதை பற்றி எதையும் சிந்திக்காமலும், உணராமலும் மத்திய அரசு இருக்கிறது. இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு சென்றிருக்கும் பிரதிநிதிகளும், ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திரமோடியும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டுவர முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.