தூத்துக்குடியில் பெற்ற குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்ற இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி பிரேம் நகரை சேர்ந்தவர் இஸ்ரவேல். இவரது மனைவி சுப்புலட்சுமி (35). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புலட்சுமி சென்னையை சேர்ந்த புரோக்கர் ஒருவரிடம் தனது 1½ வயது குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்தாராம்.
குழந்தையை வாங்கிய அந்த புரோக்கர் இதுவரை சுப்புலட்சுமிக்கு பணம் கொடுக்கவில்லை. இதையடுத்து சுப்புலட்சுமி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது குழந்தையை ரூ.25 ஆயிரத்திற்கு சென்னை புரோக்கரிடம் விற்றேன். அவர் பணம் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் குழந்தையை விற்ற சுப்புலட்சுமியை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை வாங்கி சென்ற புரோக்கரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.