புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2015

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்தவை சந்தித்த வடகிழக்கு சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள்!

இலங்கையில் அண்மைக்காலமாக காணப்பட்டஅசாதாரண சூழல் காரணமாக வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும்
தமிழ் நாட்டிலும் வசிக்கும் அகதிகளை பதிவுசெய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) வட- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்குமிடையில் சந்திப்பொன்று தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
வட - கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நஸீர் அஹமட், செயலாளர் ஹசன் அலி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர்.
இதன்போது, வடகிழக்கிலிருந்து வெளியேறி நாட்டின் பல பாகங்களிலும் வசிக்கும் மக்கள், வாக்காளர் இடாப்பில் ஏதேனும் ஒரு பிரதேசத்தில் உள்வாங்கப்படவேண்டும் என ஏகோபித்த குரலில் வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் அனைவரும் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரினார்.
அதேநேரம் புத்தளம், சிலாபம் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம்கள் வாக்காளர் இடாப்பில் பதிவதற்கு வழங்கப்படும் கால எல்லையை அதிகரிக்குமாறும் கோரினார்.
மேலும் இதனையடுத்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் இதற்கு ஒப்பான கருத்தையே வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் புளொட் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவிக்கையில்,
அசாதாரண சூழலின் காரணமாக வடகிழக்கு தாயகங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழ் நாட்டு அகதி முகாம்களிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களை வாக்காளர் இடாப்பில் உள்வாங்குவதற்கு பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டும். அத்துடன் அவர்கள் வாக்களிப்பதற்கான ஏதுநிலைகள் உடனடியாகக் காணப்படாத போதிலும் ஆகக் குறைந்தது மதிப்பீட்டு ரீதியான பதிவொன்றாவது காணப்படுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, குறித்த கருத்தை ஆமோதித்து அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களை வாக்காளர் இடாப்பில் இணைத்துக்கொள்ளும் வகையில் நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு சட்டமூலம் ஒன்று உருவாக்கப்படவேண்டியுள்ளது எனக்குறிப்­பிட்ட தேர்தல்கள் ஆணையாளர் இவ்விடயம் தொடர்பாக அதீத கவனம் எடுத்து ஜனாதிபதியிடம் பேசவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக சிறுபான்மை தரப்பினராகிய நீங்களும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் எழுத்துமூலமான கோரிக்கைகளை முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ad

ad