தமிழகத்தில் மதுக்கடைகளால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மகளிர் காங்கிரஸ் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் நக்மா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் மாநில மகளிர் காங்கிரஸ் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேசிய அளவில் கணவனை இழந்தவர்கள் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளனர். இதற்கு மது விற்பனை அதிகரித்திருப்பதே காரணம். ஒரு பக்கம் இலவச சேலைகளை அளித்துவிட்டு மறுபுறம் மதுவைக் கொடுத்து கைம்பெண்களை உருவாக்குகின்றனர். டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தில் நிலவுகின்றன. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு தைரியும் உள்ளது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு முன் உதாரணமாக காமராஜர் ஆட்சி இருந்ததாகவும், அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு கக்கன் போன்றோர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்ட நக்மா, தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.