அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து, அதன் அரசியல் பிரிவு மகளிர் அணியின் பொறுப்பாளராகச் செயல்பட்ட போராளி தமிழினி, புற்று நோய்க் கொடுமைக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மறைந்து விட்டார் என்று செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். தனது 19வது வயதிலேயே, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பல போராட்டங்களை இவரே முன்னிருந்து நடத்தியவர். போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போதிலும், கவிதை, கட்டுரை, இலக்கியம் என்பதிலும் நாட்டம் கொண்டவர். இலங்கை ராணுவ முகாமில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து, 2013ஆம் ஆண்டு தான் தமிழினி விடுவிக்கப்பட்டு, இலக்கியப் பணியிலே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார். அவருடைய மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவருடைய குடும்பத்தினருக்கும், இயக்கத் தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.