புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

இந்திய துணைத்தூதுவர் நடராஜாவிற்கும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு


இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவிற்கும் மன்னார் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மன்னாரில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் அதன் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி கிராமங்களின் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறையின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் என்.மெராண்டா கலந்து கொண்டார்
இதன் போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி துழைந்து மீன் பிடியில் ஈடுபடுவதினால் மன்னார் மாவட்டம் மற்றும் வட பகுதி மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
அத்தோடு இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது வட பகுதி மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைத் தொகுதிகள் இந்திய இழுவைப் படகுகளில் மாட்டி சேத்திற்கு உள்ளாகுகின்றமை குறித்தும் இதனால் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் சகல பிரச்சினைகளும் இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு மீனவர்களின் கோரிக்கை அடங்கிய மகஜரும் அவருக்கு கையளிக்கப்பட்டது.
இதன் போது கருத்துத்தெரிவித்த இந்திய துணைத்தூதுவர் என்.நடராஜா,
மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து நான் நன்கு அறிவேன். இவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளவே நான் இங்கு வருகை தந்தேன்.
மீனவர்களின் பிரச்சினை எனக்கு தெரிந்திருந்தாலும் பொதுவாக அவர்களை சந்தித்து கலந்துரையாடி மேலும் பல பிரச்சினைகளை தொரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
மன்னாரிற்கு வந்து கடற்தொழிலாளர்களையும், பிரதி நிதிகளையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இச் சந்திப்பின் ஊடாக நமது மக்களுக்கு இன்னும் உதவிகள் செய்ய வேண்டும்.
மீனவர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்ற ஒரு நோக்கத்திற்காகவே இங்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad