ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி எதிர்க்கட்சிக் குழுவாக இயங்கத் தீர்மானித்துள்ளோம் என்று முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே, தற்போதைய அரசாங்கம் இரண்டு தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அரசாங்கம் தனது கொள்கைப்படியே முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தடவைகளில் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பார்க்கும்போது ஜனாதிபதிக்கு இந்த அரசாங்கத்தில் எதுவித அதிகாரமும் இல்லை. மறுபுறத்தில் அமைச்சர்கள் ஆளாளுக்கு அடித்துக கொள்கின்றார்கள். விஜேதாசவும், ராஜிதவும் ஒருவரையொருவர் பகிரங்கமாக விமர்சித்துக் கொள்கின்றார்கள்.
அமைச்சர்களான விஜேதாசவும், நிமல் சிறிபால டி சில்வாவும் இந்த அரசாங்கம் நிலைத்து ஆட்சியில் இருக்காது என்று வலியுறுத்தியுள்ளனர். பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே லஞ்சம் வாங்கியிருப்பதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது இன்னும் ஆறு மாத காலத்திற்குள் இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும். எதிர்க்கட்சி குறித்தும் அதையேதான் சொல்ல வேண்டியுள்ளது. என்றார்.