கொழும்பு, பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் தாயொருவர் தனது 14 நாட்களேயான பெண் சிசுவை கழுத்து நெரித்துக்கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காசல் வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறவந்த 34 வயது தாய் ஒருவரே உடனிருந்த தனது குழந்தையை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தை தொடர்ந்து அந்த தாய் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மாதிவல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது அவருடன் அவரது 14 நாட்களான சிசுவும் தங்கவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வழமையான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்ற நிலையில் காலை 10.10 மணியளவில் அப்பெண்ணின் குழந்தை இறந்த நிலையில் இருப்பதை அவதானித்து தாதியர்கள் உடனடியாக பொரளை பொலிஸாருக்கு அறிவிக்கவே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது தானே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தாய் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் புதுக்கடை பிரதான நீதிவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இந்த தாய்க்கு ஏற்கனவே 5,3 வயதுகளில் இரு ஆண் பிள்ளகைள் இருப்பதாக கூறும் பொலிஸார் கணவன் ஆசிரியராக தொழில் புரிபவர் எனவும் அப்பெண் தொழிலுக்கு செல்பவர் அல்ல எனவும் தெரிவித்தனர்.
சிசுவின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் காசல் வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.