நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் இணையதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் வெளியேறி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி சிம்பு அனிருத்துக்கு எதிராக புகார்கள் அளித்தனர்.
சிம்பு பாடியது தவறல்ல என்று ஒரு சில நடிகர்களும் அவர் பாடியது கண்டனத்துக்குரியது என வேறு சில நடிகர்களும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் சிம்பு ரசிகர்கள் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சிம்புவுக்கு தெரியாமல் அவரது பாடலை யூ டியூப்பில் வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இத குறித்து சிம்பு ரசிகர்கள் தெரிவிக்கையில் காலம் காலமாக தமிழ் படங்களில் மட்டும் இல்லாது இந்திய சினிமாவில் இலை மறை காயாக ஆபாச வரி பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. கவிஞர் வாலி முதல் கொண்டு இசை அமைப்பாளர் இளையராஜா வரை யாரும் இந்த விமர்சனத்திற்கு தப்ப வில்லை.
தற்போது நடிகர் சிம்பு பாடியதாக ஒரு பாடலை அவருக்கு தெரியாமலேயே இணையதளத்தில் வெளியிட்டு அவரது வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் சிலர் முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலலையெனில் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.