சென்னை தியாகராயர் நகரில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:– வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?
பதில்:– 27–ந் தேதி நடைபெறும் மாநாட்டுக்கு பிறகு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
கேள்வி:– பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா?
பதில்:– அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ம.க. தலைமையில் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம். அப்படி வரவில்லை என்றாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.
தேர்தல் கருத்துக்கணிப்பு
கேள்வி:– தேர்தல் கருத்துக்கணிப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:– தேர்தல் கருத்துக்கணிப்பு என்று சொல்வதை விட, இது கருத்து திணிப்பு என்று சொல்லலாம். அதை ஊடகங்கள் மூலம் அனைவருடைய மனதிலும் திணிக்க பார்க்கிறார்கள். நான் சந்தித்த 100 பேரில், 90 பேர் மாற்றத்தை தான் விரும்புகிறார்கள்.
கேள்வி:– பா.ம.க. மாநாடு எதை முன்வைத்து நடத்தப்படும்?
பதில்:– இதை திருப்புமுனை மாநாடு என்று சொல்லமாட்டோம். இது வித்தியாசமான மாநாடு. இதுவரை அரசியல் கட்சிகள் நடத்தாத மாநாடாக இருக்கும். மாநாட்டில் முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு பதிலளித்தார்.