இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு நீண்டநாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கின்ற 78 விசைப்படகுகளையும், 29 மீனவர்களையும் விடுவிக்கக் கோரியும் இலங்கை அரசால்சிறைபிடிக்கப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 18 படகுகள் இலங்கை கரையிலேயே மூழ்கி நாசமாகிப் போனதற்கு நிவாரணம் கோரியும் இன்று காலை சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதில் 9 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ அமைப்பினர் மற்றும் மனித நேயமக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக இணைப்பொதுச் செயலாளர் மல்லைசத்யா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், “மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து பல போராட்டங்களை மாவட்ட வாரியாகவும் இராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர், நாகப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர் ஆகிய ஆறு மாவட்டங்கள் இணைந்தும் பல போராட்டங்களை நடத்தியும் இந்த மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.எங்களுக்கு பதிலும் சொல்லவில்லை. அதனால் இலங்கை அரசிடமே நீதி கேட்க சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறோம்.இன்று நடக்கும் இந்த போராட்டத்தில் 9 மாவட்ட மீனவ மக்கள் கலந்துகொண்டனர். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவ சமுதாயத்தைஒன்று திரட்டி பெருந்திரள் போராட்டம் நடத்துவோம்” என்றனர். போராட்டத்தின் போது தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற மீனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது இருதரப்பிற்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே மூன்று மீனவர்கள் திடீரென மண்ணெண்ணெயை தங்கள் மேலே ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றனர்.உடனே போலீசார் ஓடிவந்து அவர்களை தடுத்து கைது செய்தனர்.
|