புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது?விவாதிக்க தயாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன்



தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   அவர், ’’வைகோவை போல சுய நலமிக்க தலைவர் தமிழகத்தில் யாரும் கிடையாது. தனது நலனுக்காக எந்த நிலைப்பாட்டையும் மாற்றிக் கொள்ளும் ஒரு தலைவர்தான் வைகோ.

விஜயகாந்தை பாஜக மயக்க பார்த்ததாக கூறும் வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் இல்ல திருமண விழாவுக்காக மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் கொடுக்க வந்த போது என்ன சொன்னார்.

வைகோவிடம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு வந்த மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களிடம் இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் கிடையாது என்றார். ஆனால் வைகோ அப்போது தி.மு.க.வுடன் மட்டும் தான் கூட்டணி என்றார். அதன் பிறகு 3 நாட்கள் கழித்து பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக தி.மு.க. எனது கட்சியை அழிக்கப் பார்க்கிறது என கூறினார்.

இந்த 3 நாட்களுக்குள் வைகோவின் நிலை மாறியது எப்படி? அவரது இந்த சிந்தனை வளர்ச்சிக்கு காரணம் என்ன? என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் யாரிடத்திலோ விலைபோய் விட்டதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என நான் கூறுகிறேன்.

யாரிடத்திலோ பேரத்துக்கு அடிபணிந்து விட்டு இன்று பா.ஜனதாவை குற்றம் சாட்டுவதாக நினைத்து விஜயகாந்தை கொச்சைப்படுத்தி பேசுகிறார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முன்னிலைப்படுத்துவதால் வைகோவுக்கு ஏற்பட்டுள்ள பொறாமையின் வெளிப்பாடு தான் அவரது இந்த பேச்சு.

தன்னை கொள்கை வீரர் என கூறும் வைகோ திருச்சியில் தி.மு.க. கட்அவுட்டில் நின்று விட்டு அதே நேரம் அ.தி.மு.க.வுடன் தொகுதிகள் பேசி முடித்தார். இது தான் கொள்கையா? வைகோ இதுவரை வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது? என விவாதிக்க தயாரா?

சொந்த கூட்டணி தலைவர் மீது பழி போடும் காழ்ப்புணர்வு மிக்க மனிதர் அவர். தன்னை தூய்மையான மகாத்மா காந்தி போல காட்டிக் கொள்ளும் வைகோ தனது கொள்கை நிலைப்பாட்டில் ஒரு போதும் உறுதியோடு இருந்தது இல்லை.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத கம்யூனிஸ்டுகள், சமூக மாற்றத்தை விரும்பாத வைகோ இவர்கள் இணைந்த இந்த கூட்டணி சிதறுண்டு போகும். எப்படி சாகித் அப்ரிடிக்கு இந்த உலக கோப்பை கடைசி இன்னிங்சோ அது போல விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தல் கடைசி இன்னிங்சாக இருக்கும். இந்த தேர்தலோடு விஜயகாந்த் அரசியல் துறவறம் மேற்கொள்ள வேண்டிய வழியை வைகோ காட்டி உள்ளார்.

யாருக்கும் விலை போக முடியாத உணர்வுள்ள விஜயகாந்த்தை சூழ்ச்சியால் வைகோ வீழ்த்தி விட்டார். விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்ததால் வைகோ தான் பயன் அடைவார். விஜயகாந்துக்கு எந்த பலனும் கிடையாது.

தமிழ்நாட்டில் மிகப்பெரிய நடிகர் யார் என்று கேட்டால் சிவாஜி என குழந்தைக்கும் கூட தெரியும். ஆனால் அவரை விட வல்லமை படைத்த ஒரு நடிகர் என்றால் அது வைகோ தான்.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத கம்யூனிஸ்டுகள், சமூக மாற்றத்தை விரும்பாத வைகோ, இவர்களோடு எந்த கொள்கை முடிவும் எடுக்காமல் இணைந்துள்ள விஜயகாந்த் ஆகியோர் சேர்ந்துள்ள இந்த கூட்டணி மாற்றுக் கூட்டணியாக இருக்காது. தேர்தலுக்கு பிறகு மறைந்து போகும் கூட்டணியாகத் தான் இருக்கும். தேர்தலுக்குள் சிதறுண்டு போனாலும் ஆச்சரியம் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad