புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2016

234-ல் போட்டியிடும் 'அந்த' 41 வேட்பாளர்கள்...! -ஜெயலலிதாவை மிரள வைத்த வீரப்பன்

ட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'திடீர்' வன்னியர் பாசத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் வட
மாவட்ட மக்கள். 'தேர்தலில் வீரப்பன் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற பயம்தான் காரணம்' எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

அ.தி.மு.கவின் அனைத்து வேட்பாளர்களும் இரட்டை சிலை சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் அளவுக்கு களத்தை அமைத்திருக்கிறார் ஜெயலலிதா. எங்கு பார்த்தாலும் இலை மட்டுமே தெரியும் அளவுக்கு அவர் வியூகம் வகுத்தாலும், அதற்குள் ஒளிந்திருக்கும் பெரும்பான்மை சமூகத்தின் மீதான பாசம் அதிர வைக்கிறது.
இது, தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக, 41 வன்னியர் வேட்பாளர்களையும், 33 முக்குலத்தோர் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் ஜெயலலிதா.
'இதுவரையில், வன்னியர்களுக்கு இவ்வளவு இடங்களை ஜெயலலிதா ஒதுக்கியதில்லை. இதற்கான பின்னணிதான் அதிர்ச்சியளிக்கிறது' என்கின்றனர் வன்னியர் சமூகத்தினர். 

"தமிழ்நாட்டில் பெரும்பான்மையாகவுள்ள பிரிவினரில் வன்னியர்களும் அடக்கம். அ.தி.மு.கவும், தி.மு.கவும் வழக்கம்போல, வன்னியர்களை முன்னிறுத்தி அரசியல் செய்வார்கள். ஆனால், இவ்வளவு தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்தத் தேர்தலில் வன்னியர்களுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்க சில காரணங்கள் இருக்கின்றன. தி.மு.க.வின் மகளிரணித் தலைவி கனிமொழி, 'ஜெயலலிதா தேவர்களுக்கும் வேளாளக் கவுண்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது போல, வன்னியர்களுக்கு தி.மு.க முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்பதை தொடர்ந்து பேசி வருகிறார். கட்சிக்குள்ளும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தி.மு.க. 'இந்தக் கருத்து தி.மு.கவில் எடுபடும்' என ஜெயலலிதா கருதியிருக்கலாம். வன்னியர்களை வைத்து அரசியல் நடத்தும் பா.ம.கவும் வன்னியர் வேட்பாளர்களை அதிகளவில் களத்தில் நிறுத்துவார்கள்.
'இவர்களை பலவீனப்படுத்த வேண்டும்' என ஜெயலலிதா நினைக்கிறார். இதைவிட நுணுக்கமான காரணம் ஒன்றும் இருக்கிறது. இதை மற்றவர்கள் அறிவதைவிட, ஜெயலலிதா மனசாட்சி மிக நன்றாகவே அறியும். ' தமிழக, கேரள வனப்பகுதிகளை ஆட்சி செய்து வந்த வீரப்பனை சுட்டு வீழ்த்தியது தனது அரசின் சாதனை' எனச் சொல்லிக் கொண்டார் ஜெயலலிதா. 'சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அவர் வல்லவர்' என ஜெயலலிதாவைக் காண்பித்ததும் இந்தச் செயல்தான். 'அரக்கனை சுட்டு வீழ்த்தினேன்' என்று சொன்னார் ஜெயலலிதா. வீரப்பனை சுட்டுக் கொன்றது பற்றி எந்த அரசியல் கட்சியும் எதிர்த்து வாய் திறக்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் அந்த சாதனையே இன்று அவருக்கு சோதனையாக மாறிவிட்டது. 

வடபுலத்தில் நிற்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான், 'வீரத்தமிழன் வீரப்பன், என் வனக் காவலன் வீரப்பன், அம்மையார் ஜெயலலிதா அவர்களே இன்று சொல்வீர்களா? வீரப்பனை அரக்கன் என்று' என அவர் செய்யும் பிரசாரம் அ.தி.மு.கவுக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கிவிட்டது. வீரப்பனை முன்னிறுத்தி தங்களைக் கட்டமைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.
இதற்காக, 36 வன்னியர் வேட்பாளர்களையும் சீமான் களமிறக்கியிருக்கிறார். வன்னியர் மனதில் இருந்து வீரப்பனின் நினைவுகளை அழித்துவிட முடியாது. இன்றும் அவரது சமாதிக்குச் சென்று மண் எடுத்து வருபவர்கள் இருக்கிறார்கள். இதை மனதில் வைத்தே 41 வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.
பண்ருட்டியார்,கே.பி.முனுசாமி, பாலக்கோடு அன்பழகன், வன்னியர் இடஒதுக்கீட்டுக்குச் சிறை சென்ற பு.தா.இளங்கோவன், கோவிந்தராஜ், எம்.சி.சம்பத், ராஜேந்திரன், செல்வி ராமஜெயம் என பிரபலமான வன்னியர்களும் இதில் அடக்கம். அ.தி.மு.கவின் வன்னியர் வேட்பாளர்களால், முதலியாரையும் அணுக முடியும், ஒடுக்கப்பட்ட மக்களையும் அணுக முடியும். பா.ம.கவால் அது முடியாது என்பதையும் கருத்தில் கொண்டே ஜெயலலிதா இதைச் செய்திருக்கிறார். இந்தத் தேர்தலில் வீரப்பனை மையமாக வைத்து அரசியல் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஜெயலலிதா வெகு சாதுர்யமாக காய்களை நகர்த்தியிருக்கிறார்" என்கிறார் வட மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர். 

'இது உண்மைதானா?' என்ற கேள்வியை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டோம்.
"நூற்றுக்கு நூறு சதவீத உண்மை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. வீரப்பன் என்ற பிம்பத்திலிருந்து தனது அரசியலை கட்டமைக்கிறார் சீமான். ராமதாஸ் விட்ட இடத்திலிருந்து சீமான் தொடங்குகிறார். வீரப்பனும் பிரபாகரனும்தான் அவர்களின் முக்கிய நோக்கம். இதல் ராமதாஸுக்குத்தான் கூடுதல் டென்ஷன். தருமபுரியில் மட்டும்தான் பா.ம.க வெற்றி பெற முடியும். அரசியல் களத்தில் இருபது வருடம் பா.ம.க இருந்தாலும், மற்ற இடங்களில் வெற்றி பெறக் கூடியவர்கள் அ.தி.மு.கவின் வன்னியர்கள்தான். கருணாநிதி 20 இடங்களில் வன்னியர்களை நிறுத்துகிறார். பா.ம.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க வன்னியர்களை முன்னிறுத்தும்போது, கருணாநிதி இதைச் செய்யவில்லை. தருமபுரி, கடலூர் பகுதிகளில் மட்டும் வன்னியர்களை களமிறக்கியுள்ளது திமுக. மற்ற இடங்களில் முஸ்லிம், உடையார், நாயுடு என கூட்டுக் கலவையில்  வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் கருணாநிதி. எது எப்படியிருந்தாலும், வன்னியர்களுக்கு இந்தளவுக்கு முக்கியத்துவத்தை ஜெயலலிதா கொடுப்பார் என ராமதாஸ் எதிர்பார்த்திருக்க மாட்டார். 

வீரப்பனை மையமாக வைத்து அரசியல் எழும்போது, அதற்குப் பதில் சொல்ல ஜெயலலிதா விரும்ப மாட்டார். மாறாக, அதிகளவு வன்னியர் வேட்பாளர்களை நிறுத்தும்போது, வீரப்பன் விவகாரம் அடிபட்டுப் போகும் என்பதே அவரது அரசியல் கணக்கு.
அ.தி.மு.கவின் பிரதான முக்கியத்துவம் தேவர் ஜாதிதான். அவர்கள் சார்பாக, 30 முக்குலத்தோர்களை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறார். இதில், 22 கள்ளர் சாதிகள் அடக்கம். பொதுவாக,  கள்ளர்கள் தி.மு.கவுக்கு வாக்களிப்பவர்கள். அவர்களை முழுமையாக தன்பக்கம் ஈர்க்க தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. நாயுடு சமூக வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்கு பிரியக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டே 27 இடங்கள் வரையில் மேற்கு மண்டலத்தில் வேளாளக் கவுண்டர்களுக்கு கொடுத்திருக்கிறார். அடுத்தபடியாக, நாடார் பெரும்பான்மை தொகுதிகளில் நாடார்களை நிறுத்தியுள்ளார் ஜெயலலிதா. ' இது தேவர் கட்சி' என நாடார் சமூகம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தனித் தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. இது அ.தி.மு.க கொடுத்தது அல்ல. அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் கொடுத்தது. சட்டமன்றத் தேர்தலில் அனைத்துவிதமான சாதக, பாதகங்களை ஆராய்ந்து வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார் ஜெயலலிதா " என்றார் விரிவாக.
அரசியல் கணக்குகளுக்குள் வீரப்பன் ஒளிந்து கொண்டிருப்பதை அறியாமல் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. வடபுலத்து மக்கள் அதை அறிந்ததுபோல் தெரியவில்லை

ad

ad