இலங்கையில் தனி ஈழத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை எமது கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தனி ஈழம் எய்திடும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கை தமிழர்கள் மீது போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை நிகழ்த்தியவர்கள்
மீது, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இலங்கை தமிழர்கள் முழு சுதந்திரம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்ந்திடவும், தனி ஈழத்தை எய்திடும் வகையிலும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ் நாட்டில் முகாம்கள் மற்றும் முகாம்களுக்கு வெளியே உள்ள இலங்கை தமிழர்கள் பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், உதவிகளையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அளித்து வருகிறது. அகதிகளாக இங்கே வந்த இலங்கை தமிழர்களுக்கு பிறந்து இங்கேயே கல்வி கற்றவர்களும் இருக்கிறார்கள்.
இவர்களையெல்லாம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது எனது அரசு தான். இலங்கையில் நிலைமைகள் முற்றிலும் சீரடைந்து முழுப் பாதுகாப்பு ஏற்பட்ட பின்னரே இங்குள்ள இலங்கை தமிழர்களின் விருப்பத்தின் பேரிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது தான் எங்களது கொள்கை. இங்கே உள்ள இலங்கை தமிழர்கள் வேலை வாய்ப்புகளை எளிதில் பெரும் வகையில் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்துவோம்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் பல கபட நாடகங்களை ஆடி இலங்கை தமிழருக்கு தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை நாட்டிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் அங்கு வசிக்கும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். எனவே தான், இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து 1980-களிலிருந்து பல்வேறு இலங்கை தமிழ் அமைப்புகள் ‘சுயாட்சி அந்தஸ்து”, ‘தனி ஈழம்’ என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தன.
2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக் ஷ பொறுப்பேற்று கொண்டார். இங்கே தமிழ் நாட்டில் 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க .தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன் 2006-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘ஈழத் தமிழர்கள் அமைதி நிறைந்த நல்வாழ்வுரிமை பெறுவதற்கு வழி காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என தி.மு.க .வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவர்கள் செய்தது என்னவோ இதற்கு எதிர்மறையான செயல்களைத் தான்.
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி 2004 முதல் மத்தியிலே நடைபெற்று வந்தது. இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
2008-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தினர் 100 பேருக்கு ஹரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை இராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. இவை அனைத்தும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக-விற்கு நன்கு தெரியும். இருப்பினும், கருணாநிதி இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியாவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை, 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு தொடக்கத்திலும் இலங்கை தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்போது பல முறை வற்புறுத்தினேன். ஆனால் இதை செய்வதற்கு மனம் இல்லாமல் எந்த நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை.
மக்களை ஏமாற்றும் விதமாக “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்”, “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனித சங்கிலி போராட்டம்”, “பிரதமருக்கு தந்தி”, “பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா” என்ற வெற்று அறிவிப்புகளுடன் ராஜினாமாக் கடிதங்களை தானே பெற்று வைத்துக் கொண்டது; “இறுதி எச்சரிக்கை” என்ற அறிவிப்பு என பல்வேறு நாடகங்களை நடத்தி,
இறுதி நாடகமாக “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் 3 மணி நேரத்திற்கும் குறைவாக படுத்துக் கொண்டு உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொண்டார். அவ்வாறு முடிக்கும் போது, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டு விட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்தார் . கருணாநிதி. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று இவரது பேச்சைக் கேட்டு பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வெளியே வந்தனர். இலங்கை ராணுவம் அவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது.
குண்டு மழைக்கு விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் கூட குண்டுகள் வீசப்பட்டு தமிழர் இனப் படுகொலை நடத்தப்பட்டது.
3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட கருணாநிதி, இலங்கையில் தமிழர்களின் மீதான போரை நிறுத்தி விட்டதாக மத்திய அரசு தனக்கு தெரியப்படுத்தியதாகவும், தான் அவ்வாறு ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லி வந்தார்.
உயிர் பிழைத்த தமிழர்கள் எவ்வித வசதியும் இல்லாமல் இராணுவ முகாம்களில் கம்பி வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டனர். தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் திட்டமிட்டு நடைபெற்றது. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று, அப்போதைய இலங்கை ஜனாதிபதி ராஜபக் ஷ வுடன் விருந்துண்டு பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டு இந்தியா திரும்பி, இலங்கை தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டனர்.
சில மாதங்களுக்கு முன் இலங்கை வடக்கு மாகாண உறுப்பினரான அனந்தி சசிதரன் இறுதிப் போர் உச்சகட்டத்தில் இருந்த 2009-ஆம் ஆண்டுமே 16-ந் திகதி இரவு கருணாநிதியின் மகள் கனிமொழியிடம், தனது கணவர் சசிதரன் செய்மதி தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது கனிமொழி, அவர்களை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாகவும் சர்வதேச அளவில் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். அதை நம்பியே சரணடைந்த ஈழத் தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போய் விட்டனர் என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இங்குள்ள தமிழருக்கு மட்டுமல்லாமல் இலங்கை தமிழருக்கும் இவ்வாறு துரோகம் இழைத்தவர் தான் கருணாநிதி.
திமுக-வும், காங்கிரஸும் சேர்ந்து இலங்கை தமிழர்கள் அழிவுக்கு காரணமாக இருந்து விட்டு, பின்னர் ஏற்பட்ட ஏதோ பிரச்சனையால் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கருணாநிதி, “ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழ் இனத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை” என்று கூறினார்.
காங்கிஸுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், “கூடா நட்பு கேடில் முடியும்” என்றெல்லாம் பேசி காங்கிரஸிலிருந்து பிரிந்த கருணாநிதி, தனது மகள் கனிமொழி மாநிலங்களவையின் உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக காங்கிரஸின் ஆதரவை கேட்டுப் பெற்றவர் தான்.
பின்னர் பாராளுமன்ற தேர்தலின் போது தனக்கு பயன்பட மாட்டார்கள் என்பதால் காங்கிரஸை வெட்டி விட்டவர் தான் கருணாநிதி. தற்போது காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார் . கருணாநிதி என்றால், 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது வேறு காரணங்களுக்காகத் தானே? இது போன்ற கபட நாடகங்களை எல்லாம் நடத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என கருணாநிதி நினைத்தால் அது ஒரு போதும் நிறைவேறாது.
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதே, ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போன கருணாநிதி, இப்போதைய தேர்தல் அறிக்கையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்தி செயற்படுத்த வேண்டுமென தி.மு.க. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறியிருப்பதை நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
2011-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இலங்கைப் போரின் போது போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் நிகழ்த்தியவர்கள் மீது சுதந்திரமான சர்வதேச புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்திட ஒரு தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும் என்றும், இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், இனப் படுகொலை செய்தவர்கள் மீது சர்வதேச விசாரணை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு மூலம் இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், பல்வேறு தீர்மானங்கள் சட்டமன்றத்தில் என்னால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் ஈழம் எய்திட தொடர்ந்து போராடும் என்றார்.