புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2016

பலவீனமடைகிறதா தேமுதிக?

திமுகவுடன் கூட்டணி இல்லை, மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்து செயல்படுவது என்கிற தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முடிவுகள், திமுக தலைமையை மட்டுமல்ல; அடிமட்டத் தொண்டர்கள்வரை நிலைகுலையச் செய்துவிட்டிருக்கின்றன என்பது உலகறிந்த உண்மை.
தேமுதிக கட்டாயம் எங்கள் கூட்டணியில் இணையும், பழம் கனிந்து விட்டது, பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்பன போன்ற திமுகவின் அறிவிப்புகள், தொண்டர்கள் மத்தியில் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. பாபா, கோச்சடையான், லிங்கா திரைப்படங்கள்போல, அந்தப் பெரிய எதிர்பார்ப்பு, பொசுக்கென்று போய்விட்டது.
தேமுதிகவைப் பொருத்தவரை, ஆரம்பம் முதலே திமுகவுடன் கூட்டணியா இல்லையா என்பதில் இரண்டு கருத்துகள் இருந்து வந்தன. பெரும்பாலான சட்டப் பேரவை உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்களும் திமுகவுடன் கூட்டணி அமைந்தால் கூடுதல் இடங்கள் கேட்டுப் பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகிவிடலாம் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். இவர்களில் பலரும், பதவி சுகத்தை அனுபவித்து விட்டவர்கள்.
அதே நேரத்தில், விஜயகாந்தும் சரி, அவரது மனைவியும் மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதாவும் சரி, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எச்சரிக்கையாகவே இருந்து வந்தனர். அதிமுகவுடனான உறவு முறிந்தது முதல், தேமுதிக உறுப்பினர்கள் பலரும் திமுகவுடன் நெருக்கமாகி விட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவில் ஐக்கியமாகி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவார்கள் என்பதை விஜயகாந்த் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தார்.
திமுகவுடன் கூட்டணி இல்லை என்றது முதல் தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், ஒருசில முக்கியமான மாவட்டச் செயலாளர்களும் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவார்கள் என்பதை தேமுதிக தலைமை எதிர்பார்த்தது. அதனால்தான், “நீங்கள் எம்.எல்.ஏ.வாவது முக்கியமா, கேப்டன் முதல்வராவது முக்கியமா?” என்கிற கேள்வியை பிரேமலதா எழுப்பினார்.
“தேமுதிகவைப் பொருத்தவரை இந்த எம்.எல்.ஏ.க்களையும், மாவட்டச் செயலாளர்களையும் சார்ந்த இயக்கமல்ல. எப்படி அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தேமுதிகவில் எங்கள் தலைவர் விஜயகாந்த். அவர் ஒன்று. மற்றவர்கள் சைபர், இந்த ஒன்றுடன் சைபர் சேர்ந்தால் மட்டும்தான் அவர்களுக்கு மரியாதை. இவர்கள் வெளியேறுவதால், கட்சியின் தொண்டர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். மாறாக, இவர்களது துரோகத்தால் கட்சி பாதித்துவிடக் கூடாது என்று மேலும் வெறியுடன் தொண்டர்கள் பணியாற்றுவார்கள். நல்லவேளை நாங்கள் திமுகவின் துரோகத்திற்கு பலியாகாமல் தப்பித்தோம்” என்கிறார் தேமுதிகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மலர்மன்னன்.
“தங்களது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிட்ட விஜயகாந்த்தையும், தேமுதிகவையும் சிதைப்பது என்பதில் திமுக குறியாக இருக்கிறது. அது, தேமுதிகவுக்கு அனுதாபத்தை அதிகரிக்கிறதோ இல்லையோ, விஜயகாந்த் திமுகவுடன் சேர வேண்டாம் என்று எடுத்த முடிவு சரிதான் என்கிற தோற்றத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது” என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டுவேலன்.
எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து பிரிந்து அதிமுக தொடங்கியபோதும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்படத் தொடங்கியபோதும், அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்களைக் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் திமுக தூண்டிய சரித்திரம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் தேமுதிகவினர்.
ஆனால், அந்த முயற்சியால் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பலவீனப்படவில்லை என்பதையும், தொண்டர்கள் அவர்களைவிட்டு அகலவில்லை என்பதையும் கூறி, அதேபோல தேமுதிகவோ, விஜயகாந்தோ எந்தவிதத்திலும் இதனால் பலவீனப்படப் போவதில்லை என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.
தேமுதிகவின் செல்வாக்கு அப்படியே இருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்கிற சர்ச்சைக்கு இப்போது முற்றுப்புள்ளி
விழுந்து விட்டது. தேமுதிக இல்லாமல் தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது என்கிற தோற்றத்தைத்தான், தேமுதிகவை உடைக்க எடுக்கப்படும் முயற்சிகள் வெளிச்சம் போடுகின்றன.
“அதிமுக தனது பலத்தை நம்பிக் களமிறங்கி இருப்பதுபோல, திமுகவுக்குத் தேர்தலில் வெற்றி அடைவது குறித்த தன்னம்பிக்கை இல்லை என்பதைத்தான், அந்தக் கட்சியின் ஆவேச முடிவுகள் தெரிவிக்கின்றன. திமுகவுடன் மோதி ஆட்சியையா பிடித்துவிடப் போகிறது தேமுதிக? அதை உதாசீனப்படுத்தாமல், அந்தக் கட்சியை ஏதோ எதிரியாக பாவிப்பதிலிருந்தே திமுக எந்த அளவுக்கு பலவீனப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.இந்தப் பிளவால் தேமுதிக பாதிக்கப்படுகிறதோ இல்லையோ, நிச்சயமாக மக்கள் மத்தியில் திமுக குறித்த மரியாதை குறையும். விஜயகாந்த் எடுத்த முடிவு சரிதான் என்கிற தோற்றம்தான் ஏற்படும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தேமுதிக என்னவாகும் என்பது இருக்கட்டும். தேமுதிகவிலிருந்து பிரிந்து வரும் எம்.எல்.ஏ.க்களுக்கும், மாவட்டச் செயலாளர்களுக்கும் திமுகவில் போட்டியிட வாய்ப்புத் தரப்படுமா, இல்லை இதயத்தில் இடம் தரப்பட்டு ஒதுக்கப்படுவார்களா என்பதுதான் அதைவிட முக்கியமான கேள்வி!
  தினமணி

ad

ad