கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமாக இரா
சம்மந்தன் பரவிபாஞ்சான் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்வதற்கு வழியினை திறந்துவிட்ட  இராணுவ சிப்பாய் மீது இராணுவ கேணல் தர அதிகாரி ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதாக  சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் உத்தியோகபூர்வமாக இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவரிடம் பரவிபாஞ்சான் கிராமத்தில் மீள்குடியேற்றத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாத மக்கள் சிலர் தங்களின் காணிகள் உயர்பாதுகாப்பு பிரதேசமாக காணப்படுகிறது என முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்மந்தன் அவர்கள் பரவிபாஞ்சான் உயர் பாதுகாப்பு பிரதேசத்தினை பார்வையிட சென்றுள்ளார். அப்போது வீதி தடைப்போடப்பட்டிருந்த பாதையில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் வீதி தடையை அகற்றி உள்ளே செல்ல வழிவிட்டுள்ளார்.
திடீரென எதிர்கட்சி தலைவரின் வாகன தொடரணி சென்ற போது செய்வதறியாத இராணுவ சிப்பாய் தனது மேலதிகாரிகளின் அனுமதி இன்றி உள்ளே செல்ல அனுமதித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ கேணல்  நிலை அதிகாரியொருவர் குறித்த சிப்பாயின் கன்னத்தில் அறைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
யாருடைய அனுமதியை பெற்று அவர்களை உள்ளே அனுமதித்தாய் என்று வினவிய படியே தாக்கியதாக கூறப்படுகிறது.