திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கையில்,
’’விருத்தாசலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக, ஆளுக்கு 300 ரூபாய் ரொக்கமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பல இடங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்த காரணத்தால், வெளியேற முயன்ற போது காவல் துறையினர் அவர்களை வெளியே விட மறுத்ததால், நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் 17 பேர் மருத்துவ மனையிலே சேர்க்கப் பட்டுள்ளார்கள்.
நெரிசலில் சிக்கிப் பலியான இரு குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், மருத்துவ மனையிலே சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் இந்த விபத்துக்குக் காரணமான இந்த ஆட்சியினரின் காவல் துறையினரின் செயல்களுக்கு எனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.