புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2016

மீண்டும் ஜெயலலிதா! இலங்கைத் தமிழருக்கு சாதகமா?

தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பொதுவாகவே, இலங்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம் என்றாலும்,
அண்மையில் நடந்த சட்ட மன்றத் தேர்தல், இலங்கையில் கூடுதலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
இம்முறை சமூக வலைத்தளங்களிலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருந்ததால், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அதிகளவில் இந்த தேர்தல் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.
2009ல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குத் துணைபோன காங்கிரஸ் கட்சியும், அப்போது அதனுடன் இணைந்திருந்து விட்டு, பின்னர் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் இனிக் கூட்டில்லை என்று அறிவித்து விட்டு விலகிய தி.மு.க., இம்முறை மீண்டும் காங்கிரசுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஒரு அணியாக களமிறங்கியிருந்தது.
இது தமக்குத் துரோகமிழைத்த கூட்டணி என்ற எண்ணம், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஊறிப் போயிருப்பதால், இதற்குச் சார்பான நிலை இங்கு இருக்கவில்லை.
அதேவேளை, இலங்கைத் தமிழர்கள் மத்தியில், மூன்று அணிகளுக்கு கூடுதல் ஆதரவு காணப்பட்டது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.. புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி,- தே.மு.தி.க. - த.மா.க அணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியனவே அவையாகும்.
பா.ம.க. வும் இலங்கைத் தமிழர் ஆதரவுக் கட்சியாகவே அறியப்பட்டாலும், அதன் மீது அவ்வளவாக ஈர்ப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இல்லை.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழீழம் மலரத் துணை நிற்போம் என்று வாக்குக் கேட்ட ஜெயலலிதாவின் அ.தி.மு.க., இம்முறையும் அதே நிலைப்பாட்டையே முன்னிறுத்தியது.
அதைவிட, கடந்த சட்டப்பேரவையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிப்பதற்கும் கணிசமான முயற்சிகளை முன்னெடுத்தும், இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருந்தது அ.தி.மு.க.
அதைவிட, தமிழ்நாட்டில் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தும் இருந்தது.இவை அந்தக் கட்சிக்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஆதரவான நிலையை ஏற்படுத்தியிருந்தன.
புலம்பெயர் தமிழர் அமைப்புகளில் சிலவும், ஜெயலலிதாவின் வெற்றியை சாதகமாகவே கருதியிருந்தன.
வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் இடம்பெற்றிருந்த மக்கள் நலக் கூட்டணி – தே.மு.தி.க. - த.மா.க அணிக்கும் கணிசமான ஆதரவு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் காணப்பட்டது.
தமிழ்நாட்டில் மாற்று அரசியலை விரும்பிய பலரும், அதற்கு ஆதரவளித்தனர். இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக, சமூகவலைத்தளங்களில் ஏராளமான இலங்கைத் தமிழர்களும் கருத்துக்களைப் பகிர்ந்து வந்தனர்.
அடுத்து, சீமானின் நாம் தமிழர் கட்சி. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. பணத்தைக் கொடுத்தால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி, அங்கிருந்தும் நிதி திரட்டிய ஒரே கட்சி இது தான்.
அதைவிட விடுதலைப் புலிகளினதும், பிரபாகரனினதும் பெயர், படங்களைப் பயன்படுத்தி, வாக்கு சேகரித்த ஒரே கட்சியும் இதுவே. உணர்ச்சியூட்டும் சீமானின் பிரசாரத்துக்கு இலங்கைத் தமிழர்களும் அதிகளவில் அடிமையாகிப் போயிருந்தனர்.
advertisement
களநிலவரம் தெரியாத புலம்பெயர் தமிழர்கள் பலரும், சீமானின் கட்சி வெற்றி பெறுமாம் என்று தமிழ்நாட்டில் இருந்த உறவினர்களிடம் அப்பாவித்தனமாக கேட்கும் அளவுக்கு இந்தக் கட்சியின் பிரசாரம், அவர்கள் மத்தியில் எடுபட்டிருந்தது.
இப்படியாக, இம்முறை தேர்தலில், இலங்கைத் தமிழர்களின் ஆதரவு என்பது, மூன்று திசைகளை நோக்கியிருந்தது.இந்த மூன்று தரப்பினர் மத்தியிலும் காணப்பட்ட ஒரே ஒற்றுமை, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதேயாகும்.
அ.தி.மு.க. ஆட்சியமைத்து, வெற்றி பெற்றது, ஒரு தரப்பினருக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், திமு.க- காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட்டமை அவர்களுக்கு ஆறுதலை அளித்திருக்கிறது.
இந்தநிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்திருப்பது, இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமானதா- பாதகமானதா என்ற கேள்விக்கு இடமில்லை.ஏனென்றால், ஜெயலலிதாவின் இதற்கு முந்திய ஆட்சிக்காலம் இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒன்றாகவே இருந்தது. பல்வேறு வழிகளிலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுகின்ற ஒன்றாகவே இருந்தது.
எனவே, தேர்தல் முடிவு இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமா- பாதகமா என்ற கேள்வி அபத்தமானது.எந்தளவுக்கு ஜெயலலிதா அரசாங்கத்தினால் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முடியும் என்ற கேள்வியே இத்தருணத்தில் பொருத்தமானதொன்றாக இருக்கும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழீழமே ஒரே தீர்வு என்று கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் வலியுறுத்திய ஜெயலலிதா, இந்த தேர்தலிலும், அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்.
ஆனால், இந்த வாக்குறுதியை அவரால் நிறைவேற்ற முடியாது. ஏனென்றால், இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல் தலைவரும் இப்போது தமிழீழம் கேட்கவில்லை. சமஷ்டி ஆட்சியையும், தமிழர்களுக்கு சமமான உரிமைகளையும் தான் கோருகின்றனர்.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், எந்த விடயத்திலும் முடிவு ஒன்றை எடுத்தால் அதனைச் செயற்படுத்துவதில் உறுதியான தன்மையை வெளிக்காட்டுபவர். அந்த உறுதி இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது; சாதகமானது.
தமிழீழம் அமைய தொடர்ந்து பாடுபடுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு அப்பால், ஜெயலலிதாவை இலங்கைத் தமிழர்களுக்கு சமஷ்டி ஆட்சிமுறையில் கூடுதல் அதிகாரங்களைப் பெறுவதற்கான ஒரு அழுத்தக் கருவியாகப் பயன்படுத்தக் கூடிய நிலை இருந்தால் அது பெரும்பலனைத் தரக்கூடியது.
இந்திய மத்திய அரசுக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒருவராக ஜெயலலிதா மாறுவாரேயானால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்படும்.
நரேந்திர மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால், ஜெயலலிதாவின் தயவு தேவையில்லை. ஆனால், ராஜ்யசபாவில், 13 ஆசனங்களைப் பெறவுள்ள அ.தி.மு.க., அங்கு நான்காவது பெரிய கட்சியாக மாறுகின்ற போது ஜெயலலிதாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார்.
இது ஒன்று தான், மத்திய அரசாங்கத்துக்கு, தமிழ்நாடு அழுத்தம் கொடுப்பதற்கு இப்போதிருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனாலும், இது அதிகளவில் சாத்தியமாகக் கூடிய விடயமல்ல. சின்னச்சின்ன விடயங்களை இதனை வைத்து சாதிக்கலாமே தவிர, இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையாளும் அளவுக்கு இது பயனைத் தராது.
அடுத்தது, தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஜெயலலிதாவின் வெற்றி குறிப்பிடத்தக்க சாதகத் தன்மைகளைக் கொண்டது.
முன்னைய ஆட்சிக்காலங்களை விட அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள், கூடுதல் சுதந்திரத்துடனும், வசதிகளுடனும் வாழும் நிலை ஏற்பட்டதை எவராலும் மறுக்க முடியாது.
முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அதிகளவு வசதிகளை ஜெயலலிதா அரசாங்கம் செய்து கொடுத்திருந்தது.
அதேவேளை, தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற வாக்குறுதியையும் ஜெயலலிதா கொடுத்திருக்கிறார்.
இரட்டைக் குடியுரிமை வாக்குறுதியை நிறைவேற்றும் விடயத்தில் மாநில அரசாங்கத்துக்கும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. எனினும், மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்ற நிலையில், இரண்டு அரசுகளும் கொள்கை ரீதியான முடிவு ஒன்றை எட்டினால், அது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இதுபோன்றதொரு வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டால், அது அவர்களுக்கு மேலும் பல சலுகைகளையும் வசதிகளையும் பெறுவதற்கு உதவும்.
இந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைந்திருப்பது சாதகமானதாகவே இருக்கும்.
அதேவேளை, ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை வைத்துக் கொண்டு அவர் தமிழீழம் அமைத்துத் தருவார் என்றோ, மிகையான எதிர்பார்ப்புகளையோ அவர் கொண்டிருந்தால், அது ஏமாற்றங்களையே தரும்.ஏனென்றால், இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கையை அவ்வளவு இலகுவாக மாற்றியமைக்க முடியாது.
இலங்கை அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள இந்தியா தயாராக இல்லை. சீனாவை வைத்தும், கடல்சார் பாதுகாப்பு நிலைமைகளை வைத்தும் தான் இலங்கை தொடர்பான முடிவுகளை இப்போது இந்திய மத்திய அரசாங்கம் எடுக்கிறது.
இப்படியான நிலையில், ஜெயலலிதாவினால் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் ஒரு நிலையை எட்டுவது கடினம். அதற்கான புறநிலைகள் தற்போது இல்லை.
இவ்வாறான நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் சாதகமாகவே இருந்தாலும், மிகையான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய ஒன்றாக இருக்காது என்பதே யதார்த்தம்.

ad

ad