நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் மீதும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் ஜெயலலிதா அரசு போட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலானதாகும். கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப் பெரிய உரிமைகளில் ஒன்று பத்திரிகை சுதந்திரம். அந்த சுதந்திரம் பாதுகாக்கப்படும் போதுதான் ஜனநாயகத்தின் தூண்கள் உறுதியாக இருக்கும். உலக நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிகை சுதந்திரம் என்ன பாடுபட்டது என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவித்தால், கட்டுரை வெளியிட்டால், செய்திகளை ஒளிபரப்பினால் அவதூறு வழக்கு அடுக்கடுக்காகப் பாய்ந்ததை அறிவோம். புகழ்பெற்ற ஏடுகளான இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன், நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் மீதும் பல தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் ஜெயலலிதா அரசு போட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலானதாகும். செய்தி வாசிப்பாளர் மீது அவதூறு வழக்கு போட்ட கொடுமையும் கூட தமிழகத்தில் தான் நடந்தது. கருத்து சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் இந்த சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிவிட்டது.
தி.மு.கழக அரசு அமைந்ததும் பத்திரிகையாளர் நலனையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையிலான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். கழகத்தின் தேர்தல் அறிக்கையிலும் அதற்கான வாக்குறுதியைத் தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்பதுடன், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும், ஊடகத்துறையினரின் சுதந்திரம் என்றென்றும் பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்பதையும் தெரிவித்து, பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றேன். இவ்வாறு கூறியுள்ளார்.
ஐகோர்ட் தீர்ப்பில் ஒன்றை விசாரித்தால் கூட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி: ஆச்சார்யா வாதம்