அல்ஜீரியா நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம். அவர்கள் அசாமகா பகுதியில் கண்டெடுக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளது. இப்பகுதி நைஜீரியா மற்றும் அல்ஜீரியா நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது.
அந்த அறிக்கையில், கடத்தல்காரர்களால் இந்த அகதிகள் கைவிடப்பட்டு உள்ளனர். அவர்களில், நைஜீரியாவை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் 26 வயது நிறைந்த ஒரு பெண் என இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமீப வருடங்களில் அல்ஜீரியாவில் ஆயிரக்கணக்கான அகதிகள் சட்டவிரோத முறையில் குடியேறுகின்றனர்.
அவர்கள் மாலி மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தே வருகின்றனர். கடாபி லிபிய அதிபராக இருந்தவரை அகதிகளில் பலர் ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் குடியேறுவதற்கு அந்நாடு பயன்பட்டு வந்தது. அவர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் அகதிகளின் இலக்காக அல்ஜீரியா அமைந்துள்ளது. அல்ஜீரியா வழியே சென்று பலர் ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்.